3 கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் வெற்றி
சர்வதேச அளவில் சாதனை புரிந்துள்ள இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 3 கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் வெற்றியை பெற்றுள்ளார். மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
2 ஆண்டுகளாக போட்டிகளில் விலகல்
இந்நிலையில் காயம் மற்றும் குழந்தைபேறு காரணமாக கடந்த 2017 முதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளை விளையாடுவதில் இருந்து சானியா மிர்சா விலகியிருந்தார்.
ஐவர் அணியில் சானியா மிர்சா
ஜனவரி முதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாட உள்ளதாக அறிவித்திருந்த சானியா மிர்சா, ஐந்து பேர் கொண்ட பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் இடம் பெற்றுள்ளார். கடைசியாக 2016ல் இந்த போட்டியில் அவர் பங்கேற்றிருந்தார்.
வெற்றியுடன் துவங்கிய சானியா
இந்நிலையில் ஹோபார்ட் சர்வதேச போட்டியில் இரட்டையர் பிரிவில் உக்ரைனை சேர்ந்த நதியா கிச்செனோக்குடன் இணைந்து ஒக்ஸானா கலாஷ்னிகோவா மற்றும் மியு கட்டோவை எதிர்த்து வெற்றி பெற்ற சானியா மிர்சா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
சுதாரித்து வெற்றி
ஒரு மணிநேரம் 41 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் தடுமாறிய சானியா, நதியா ஜோடி பின்பு சுதாரித்துக்கொண்டு 2க்கு 6, 7க்கு 6 மற்றும் 10க்கு 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
டிவிட்டரில் உற்சாக பதிவு
இந்த போட்டியின் வெற்றிமூலம் தன்னுடைய திரும்புதலை வெற்றியுடன் துவங்கியுள்ள சானியா, தனது வெற்றியை மைதானத்தில் இருந்த தனது குழந்தையுடன் கையடித்து கொண்டாடினார். அதை தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டார்.
அடுத்த கட்டத்திற்கு தயாராகும் சானியா
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் சானியா மற்றும் நதியா ஜோடி, வனியா கிங் மற்றும் கிறிஸ்டினா மெக்ஹேல் ஜோடியை எதிர்கொள்கிறது.