ஹைதராபாத்: யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்ற சானியா மிர்சா தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தெலுங்கானா பிராண்ட் அம்பாசிடரான சானியா மிர்சா யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார். இந்த வெற்றியை அவர் இந்தியாவுக்கும், புதிதாக பிறந்த தெலுங்கானா மாநிலத்திற்கும் அர்ப்பணித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள சானியா தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை ஹைதராபாத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
இதையடுத்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சானியா மிர்சா சந்திரசேகர் ராவின் ஊக்குவிப்பால் யு.எஸ். ஓபன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி பலரை ஊக்குவிக்கும். சானியா மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சானியாவுக்கு தேவையான உதவிகளை செய்வதாக ராவ் வாக்குறுதி அளித்துள்ளார்.