சிட்னி: தொடர்ச்சியாக 28 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள சானியா - ஹிங்கிஸ் ஜோடி புதிய உலக சாதனை படைக்க காத்திருக்கிறது.
சிட்னியில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சென் லியாங்-ஷூவாய் பெங் ஜோடியை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தியது சானியா மிர்சா ஜோடி. இதன்மூலம் தொடர்ச்சியாக இந்த ஜோடி 28 ஆட்டங்களில் வெற்றி பெற்று, அதிக தொடர் வெற்றிக்கான உலக சாதனையை சமன் செய்துள்ளது.

கிகி பெர்னாண்டஸ்-நடாஷா சுவரேவா ஜோடி 28 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று 1994ம் ஆண்டு சாதனை உச்சத்தில் இருந்தது. அதன்பின்னர் எந்த ஜோடியும் இந்த சாதனையை நெருங்கவில்லை. 22 ஆண்டுகளுக்குப் பிறகு சானியா-ஹிங்கிஸ் ஜோடி தற்போது சமன் செய்துள்ளது.
இரட்டையர் தரநிலையில் முதலிடத்தில் இருக்கும் சானியா-ஹிங்கிஸ் ஜோடி, சிட்னி போட்டியின் முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அனஸ்தாசியா ரோடினோவா-அரினா ரோடினோவா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற மகளிருக்கான பிரிஸ்பேன் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா-சுவிட்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை சனிக்கிழமை பட்டம் வென்றது.