ஹைதராபாத்: டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தின் விளம்பரத் தூதுவராக இருந்து வரும் நிலையில், தற்போது விலங்குகளுக்கான அமைப்பான "பீட்டா"வின் பிரதிநிதியாக உருமாறி உள்ளார்.
சமீபத்திய அமெரிக்க ஓப்பன் டென்னிஸின் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா, தற்போது விலங்குகளின் நலனுக்காக பிரதிநிதியாக மாறி தன்னுடைய சமூக சேவை மனப்பான்மையையும் வெளிக்காட்டி உள்ளார்.
பீட்டா அதாவது பீப்பிள் பார் தி எத்திக்கல் டிரீட்மெண்ட் ஆப் அனிமல்ஸ் என்னும் அமைப்பில்தான் தற்போது விலங்குகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார் சானியா.

மக்கள் விலங்குகளை விலை கொடுத்து வாங்காமல், தெருவோரங்களில் வதைபடும் விலங்குகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் சானியா.
மேலும், தான் ஏற்கனவே 2 காப்பாற்றப்பட்ட பூனைகளை தனது பராமரிப்பில் வளர்ப்பதாகவும் கூறியுள்ளார் சானியா.
இந்த விழாவிற்காக வெள்ளுடை தேவதையாக வந்த சானியா, வெள்ளை இறக்கைகளுடன் மிகவும் அழகாக ஜொலித்தது குறிப்பிடத்தக்கது.