ஹைதராபாத்: சீன ஓபன் போட்டியின் இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்ற சானியா மிர்சா நாடு திரும்பியுள்ளார்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மார்டினா ஹிங்கிஸுடன் ஜோடி சேர்ந்து மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார். அவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் ஜோடியாக விளையாடி வருகிறார்கள்.
இந்நிலையில் சனிக்கிழமை சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த சீன ஓபன் போட்டியின் இறுதியாட்டத்தில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் நடந்த போட்டியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி ஹாவ் சிங் சான்-யுங் ஜான் சான் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இது இந்த ஜோடி இந்த ஆண்டில் கைப்பற்றியுள்ள 8வது கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு சானியா-ஹிங்கிஸ் ஜோடி இரண்டு கிராண்ட்ஸ்லாம் உள்பட 8 பட்டங்களை வென்றுள்ளது. கோப்பையை வென்ற சானியா நாடு திரும்பியுள்ளார். ஹைதராபாத்தில் வந்திறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.