சானியா கவலை
மேலும், டென்னிஸ் போட்டிகளில் ஆடுவதை கூட மறந்து தன் குழந்தை, வயதான பெற்றோர் ஆகியோருடன் இருக்கிறோமே எதிர்காலம் என்னவாகும், இவர்களை எப்படி பார்த்துக் கொள்வது என்ற கவலையில் தான் மூழ்கி வருவதாகவும் கூறி கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
மாலிக் சிக்கல்
சோயப் மாலிக் பாகிஸ்தானில் மாட்டிக் கொண்டார். நான் இங்கே குழந்தையுடன் மாட்டிக் கொண்டேன். இஸான் மீண்டும் எப்போது தன் தந்தையை பார்ப்பான் என எங்களுக்கு தெரியவில்லை. இதுதான் இதில் உள்ள அடிப்படை பிரச்சனை என்றார் சானியா மிர்சா.
வயதான தாய்
அதே சமயம், மாலிக்குக்கு 65 வயதான தாய் அங்கே இருக்கிறார். எனவே, அவர் அங்கே இருப்பது இப்போது அவசியம் என கணவர் சோயப் மாலிக்கை விட்டு தானும், குழந்தையும் பிரிந்து இருக்கும் நிலையை பற்றி கூறினார் சானியா.
எதிர்காலம் பற்றி..
டென்னிஸ் எல்லாம் யோசிக்கவே இல்லை. சில நாட்கள் முன்பு உலகம் நிலையில்லாமல் செல்வதை எண்ணி எனக்கு கவலை வந்தது. வீட்டில் குழந்தை உள்ளது. எப்படி குழந்தையை காப்பது, எப்படி நம்மை நாமே காத்துக் கொள்வது, வயதான பெற்றோர் வேறு இருக்கிறார்கள். எனவே, இந்த நேரத்தில் டென்னிஸ் பற்றியோ, வேலை பற்றியோ தான் எண்ணவில்லை என்றார்.
வீடியோவை பார்த்து குற்ற உணர்வு
ஏழைகளுக்கு தான் இந்த நேரத்தில் உதவி வருவதாக கூறிய சானியா, தான் நல்ல நிலையில் இருந்து கொண்டு, ஏழைகள் படும் துயரத்தை வீடியோக்களில் காண்பது குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது என கூறினார். மூன்று வாரங்களில் யூத் ஃபீட் இந்தியாவுக்காக சுமார் 3.3 கோடி நிதி திரட்ட தான் உதவியதாகவும் ஆனால், அதெல்லாம் போதாது எனவும் கூறினார்.
மீண்டும் டென்னிஸ்
கடந்த இரு ஆண்டுகளாக குழந்தைப் பேறு காரணமாக டென்னிஸ்-ஐ விட்டு விலகி இருந்த சானியா, 2020 ஜனவரி மாதம் முதல் தான் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கினார். ஃபெட் கோப்பை தொடரில் இந்திய அணியை பிளே-ஆஃப் வரை வழி நடத்தினார்.
கலிபோர்னியா சென்றார்
அடுத்து இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்க கலிபோர்னியா சென்றார். ஆனால், அதற்குள் அந்தத் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின் சரியாக இந்தியாவில் லாக்டவுன் அறிவிப்பு வெளியாகும் முன் இந்தியா வந்து சேர்ந்தார்.
டென்னிஸ் வீரர்கள் நிலை
இது பற்றி கூறுகையில் 200-250க்கு மேல் தரவரிசையில் இடம் பெற்று இருக்கும் டென்னிஸ் வீரர்கள் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்றார். காரணம், அவர்கள் டென்னிஸ் போட்டிகளில் ஆடாவிட்டால் கடும் நிதிச் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள் என்பது தான்.
பெரிய ஆபத்து
இனி கொரோனா வைரஸ் பிரச்சனை முழுமையாக தீராமல் டென்னிஸ் போட்டிகளை மீண்டும் துவங்குவது மிகப் பெரிய ஆபத்து என கூறி இருக்கிறார் சானியா. ஒரு டென்னிஸ் தொடரில் 500 பேர் சுமார் 100 நாடுகளில் இருந்து பங்கேற்பார்கள். அவர்கள் யாருக்கும் வைரஸ் இருக்காது என கூற முடியாது. அது மிகப் பெரிய ஆபத்து என குறிப்பிட்டுள்ளார்.