டெல்லி : டென்னிஸ் ராக்கெட்டை கையில் பிடித்தபடியான தன்னுடைய மகன் இஷானின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணம்செய்துள்ள சானியா மிர்சாவிற்கு இஷான் என்ற மகன் உள்ளார். தற்போது 21 நாள் ஊடரங்கையொட்டி தனது குடும்பத்தினருடன் வீட்டிலேயே முடங்கியுள்ளார் சானியா.

இந்நிலையில் மற்ற வீரர்களை போல சானியாவிற்கும் சமூக வலைதளமே கைகொடுத்து வருகிறது. தன்னுடைய மகனின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சானியா
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2017 முதல் குழந்தைபேறு காரணமாக டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கினார். சில தொடர்களில் பங்கேற்று ஆடவும் செய்த நிலையில், தற்போது கொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
சர்வதேச அளவில் விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன் உள்ளிட்ட தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், டென்னிஸ் வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். சர்வதேச முன்னணி சாம்பியன் ரோஜர் பெடரர், தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன்னை பிசியாக்கிக் கொண்டுள்ளார். இதேபோல தொடர்ந்து இல்லாவிட்டாலும் சானியா மிர்சாவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தன்னுடைய மகன் இஷான் வலது கையில், டென்னிஸ் ராக்கெட்டை பிடித்தபடியுள்ள புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் சானியா மிர்சா, தன்னுடைய எதிர்காலம் குறித்த கனவை அவன் கையில் எடுத்துள்ளதாகவும் சானியா குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுகளை அளித்து வைரலாக்கியுள்ளனர்.
இஷான் மிகவும் அழகாக இருப்பதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் கமெண்ட் செய்துள்ளார். இதேபோல ரசிகர்கள் பலரும் பலவித கமெண்ட்டுகளை அளித்துள்ளனர். இஷானின் இடதுகையில் கிரிக்கெட் பேட்டை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று மற்றொரு ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.