இஸ்லாமாபாத்: இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பற்றி, இருநாட்டு ஊடகங்களும் வெளியிடும் மலிவான விளம்பரங்களை நிறுத்த வேண்டும் என்று சானியா மிர்சா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியதால், சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் ஊடகங்கள் மாறி, மாறி விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஸ் டிவி வெளியிட்டு இருக்கும் விளம்பரம் உச்சகட்டம். அபிநந்தன் விடுதலை செய்யப்பட்ட போது சமூக வலைதளங்களில் வைரலான உரையாடலை நகைச்சுவை என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்துடன் தொடர்புபடுத்தி வெளியிட்டு உள்ளது.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. விளம்பரத்துக்கு இந்திய ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். பாகிஸ்தான் வேண்டும் என்றே செய்வதாக அவர்கள் புகார் கூறினர்.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர சோயப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சா கருத்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இரு நாடுகளின் தரப்பில் இருந்தும் மிகவும் தர்மசங்கடமான விளம்பரங்கள் வெளியாகி இருக்கின்றன. நீங்கள் இந்த விளையாட்டை இதற்கு மேலும் விளம்பரப்படுத்த தேவை இல்லை.
அதுவும் இவ்வளவு கேவலமாக.. போதுமான அளவுக்கு கவன ஈர்ப்பு உள்ளது. இது வெறும் விளையாட்டுதான். ஒருவேளை நீங்கள் இதை விளையாட்டை விட அதற்கு மேல் நினைத்தால் வாழ்க்கையைத் தேடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.