லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில், இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா கிங்கிஸ் ஜோடி, ரஷ்ய ஜோடியை எதிர்கொள்கிறது.
விம்பிள்டன் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் 'நம்பர்-1' வீராங்கனை இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, அமெரிக்காவின் ஜோன்ஸ், அபிகய்ல் ஜோடியை 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது.

இதன் மூலம் இத்தொடரின் 'சீனியர்' பிரிவின் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார் சானியா. 2003ல் விம்பிள்டன் தொடரில் 'ஜூனியர்' பெண்கள் இரட்டையரில் ரஷ்யாவின் அலிசாவுடன் இணைந்து சானியா பட்டம் வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டியை பொருத்தளவில், சானியா இரண்டாவது முறையாக பைனலுக்குள் நுழைந்துள்ளார். இதற்கு முன்பு 2011 பிரெஞ்ச் ஓபனில் ரஷ்யாவின் வெஸ்னினாவுடன் இணைந்து பைனல் வரை முன்னேறினார்.
சானியா, ஹிங்கிஸ் ஜோடி இன்று நடக்கும் பைனலில் ரஷ்யாவின் மகரோவா, வெஸ்னினா ஜோடியை சந்திக்கிறது. இதில் சானியா வெல்லும்பட்சத்தில், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் பெண்கள் இரட்டையரில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றலாம். இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இந்திய ரசிகர்கள் போட்டியை ரசிக்க காத்திருக்கின்றனர்.