கராச்சி: லாகூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நல நிதி காட்சிப் போட்டியில் ஆட வருமாறு பலமுறை பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் கேட்டுக் கொண்டும் அதை ஏற்க சானியா மிர்ஸா மறுத்து விட்டார். இதனால் தனது முயற்சிகளை சம்மேளனம் விட்டு விட்டது.
இந்தியாவைச் சேர்ந்த சானியா மிர்ஸா, பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை மணம் புரிந்து கொண்டுள்ளார். இருவரும் தத்துமது விளையாட்டு தேவை நிமித்தம் துபாயில் வசித்து வருகின்றனர். அங்கிருந்தபடி இந்தியாவுக்காக சானியா ஆடி வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சோயப் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், லாகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சேகரிப்பதற்காக ஒரு காட்சிப் போட்டிக்கு பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்து கொண்டு ஆடுமாறு சானியாவுக்கு அது கோரிக்கை விடுத்தது. ஆனால் அதை ஏற்க அவர் மறுத்து விட்டார். பலமுறை கோரியும் சானியா மறுத்ததால் தற்போது தனது முயற்சியை பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் கைவிட்டுள்ளதாம்.
இப்போட்டியில் பங்கேற்க சானியா மிர்ஸா, 25,000 டாலர் பணம் கேட்டதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது. அதைத் தர மறுத்ததால் ஆட மறுத்து விட்டார் சானியா என அது தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளன தற்காலிகத் தலைவர் இர்ஷாத் பட்டி இதுகுறித்துக் கூறுகையில், சானியா மற்றும் க்வேதா பெஷ்கே இடையிலான ஒரு காட்சிப் போட்டிக்கு நாங்கள் திட்டமிட்டோம்.
அவருடன் பேசியபோது 25,000 டாலர் பணம் கொடுத்தால் ஆட வருவதாக கூறினார் சானியா. ஆனால் அவ்வளவு பணம் கொடுக்கும் அளவுக்கு எங்களது நிலை இல்லை என்பதால் எங்களது முயற்சிகளைக் கைவிட்டுள்ளோம்.
தனது கணவரிடம் இதுகுறித்துப் பேசுமாறு சானியா கூறியபோதிலும் போட்டியில் பங்கேற்க அவர் கட்டணம் கேட்பதிலிருந்து இறங்கி வரவில்லை என்றார் பட்டி.