செரீனாவுக்கு அபராதம்..ஆணுக்கு ஒரு நியாயம்..பெண்ணுக்கு ஒரு நியாயமா? துவங்கியது சர்ச்சை
நியூயார்க் : செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதியில் நடுவரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு தற்போது அபராதம் விதித்துள்ளது அமெரிக்க டென்னிஸ் அமைப்பு.
செரீனா சர்ச்சையை எளிதாக முடிக்க விடாமல், இந்த அபராத முடிவு மேலும் வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மகளிர் டென்னிஸ் அமைப்பு செரீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த போட்டியில், இந்த சர்சைகளுக்கு நடுவே ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்று, தன் நாட்டின் முதல் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற பெருமையை பெற்றார்.

செரீனாவுக்கு அபராதம்
செரீனா நடுவரோடு சண்டை போட்ட விவகாரம் பற்றி விசாரித்த அமெரிக்க டென்னிஸ் அமைப்பு, செரீனாவுக்கு 17000 டாலர் (இன்றைய மதிப்பில் 12,32,000 ரூபாய்) அபராதம் விதித்தது. முதல் குற்றமாக செரீனா பயிற்சியாளரிடம் யோசனை பெற்றதற்கு 4000 டாலர், அடுத்து டென்னிஸ் ராக்கெட்டை கீழே வீசியதற்கு 3000 டாலர், நடுவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்கு 10000 டாலர் என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யோசனைகள் கொடுத்தாரா? இல்லையா?
எல்லா பிரச்சனைக்கும் மூல காரணம், செரீனாவின் பயிற்சியாளர் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து அவருக்கு சைகை மூலம் யோசனைகளை கூறினார் என்பதுதான். இதை செரீனா கடுமையாக மறுத்த நிலையில், அவரது பயிற்சியாளர் பேட்ரிக், தான் பயிற்சி அளித்ததாகவும், மற்ற பயிற்சியாளர்களும் இதை செய்வதாகவும் கூறியுள்ளார். இதனால், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. செரீனா கூறுகையில், "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என பேட்ரிக்கிடம் கேட்டேன். நாங்கள் எந்த சைகை பற்றியும் பேசவில்லை" என கூறினார்.

பெண்களுக்கு எதிராக அநியாயம்
"நான் பெண்களுக்காக இங்கே போராடுகிறேன். பெண்கள் உரிமைக்கும், பெண்களுக்கான சமநிலைக்கும் நான் பேசுகிறேன். ஆண்கள் நடுவரை பல வார்த்தைகளில் கூப்பிடுவதை பார்த்திருக்கிறேன். நான் அவரை திருடன் என சொன்னதற்காக, ஒரு கேமை அவர் என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டார். எந்த ஆணிடம் இருந்தும் இப்படி இவர்கள் செய்து நான் பார்த்ததில்லை. இது பாலின ரீதியான அடையாளப்படுத்துதல் போல உள்ளது" என தன் ஆதங்கத்தை கொட்டினார் செரீனா.

ஆதரவு அளிக்கும் அமைப்பு
செரீனாவுக்கு ஆறுதலாக மகளிர் டென்னிஸ் அமைப்பு குரல் கொடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆண்கள், பெண்கள் இடையே எந்த வகையில் காட்டப்படும் வித்தியாசத்தையும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications