அழுத்தம் ஏற்படுத்திய முதல் செட்
செரீனா வில்லியம்ஸ் தன் 24வது கிராண்ட்ஸ்லாம் வென்று, அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீராங்கனைகள் பட்டியலில் மார்கரெட்டோடு இணைவாரா? என்ற எதிர்பார்ப்போடு இந்த ஆட்டம் துவங்கியது. ஜப்பான் பெண் ஒசாகா நிலையாக ஆடியதால் அதற்கு ஈடு கொடுக்க முடியாத செரீனா முதல் செட்டை 2-6 என இழந்தார். இதனால், அடுத்த செட்டை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் செரீனா.
எச்சரித்த நடுவர்
அடுத்த செட் ஆரம்பித்தது. ஒசாகா 1-0 என முன்னிலை பெற்றார். அப்போது செரீனா பார்வையாளர் பகுதியில் இருந்து ஆலோசனை பெற்றதாகவும், அது விதியை மீறிய செயல் என நடுவர் எச்சரித்தார். அதை கடுமையாக எதிர்த்தார் செரீனா. "நான் எந்த உதவியும் பெறவில்லை. நான் வெற்றி பெற ஏமாற்ற மாட்டேன். அப்படி செய்வதற்கு பதில் நான் தோற்று விடுவேன்" என மறுத்தார்.
உணர்ச்சிவசப்பட்டு...
அடுத்து செரீனா வேகமெடுத்தார். அடுத்தடுத்த புள்ளிகளை பெற்று 3-1 என முன்னேறினார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில், ஆட்டத்தின் வேகத்தில் தன் டென்னிஸ் ராக்கெட்டை கீழே வீசினார் செரீனா. அதுவும் விதி மீறல் என்பதால் நடுவர் அதற்கு ஒரு புள்ளி தண்டனை விதித்தார். இதனால், 3-2 என ஆட்டம் மாறியது.
செரீனா வாக்குவாதம்
நடுவரின் தண்டனையால் எரிச்சல் அடைந்த செரீனா, ஆட்டத்தின் இடையில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால், அதற்கும் ஒரு தண்டனை வழங்கிய நடுவர் ஒரு கேமை ஒசாகாவுக்கு வழங்கினார். அடுத்து செரீனா ருத்ர தாண்டவம் ஆடினார். நடுவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பொய் சொல்பவர், என் புள்ளியை திருடினார் என கடுமையாக கூறினார்.
செரீனா தோல்வி
இந்த கலவரத்துக்கு நடுவே ஒசாகா வெற்றி பெற்றார். அவர் 6-4 என இரண்டாம் செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார். இரண்டாம் செட்டில் முன்னிலையில் இருந்த செரீனா தன் கோபத்தால் ஒரு கேம், ஒரு புள்ளி மற்றும் தன் கவனம் என எல்லாவற்றையும் இழந்து முக்கியமான அமெரிக்க ஓபன் பட்டத்தை இழந்தார். இவரது செயலால், பெரும் சாதனை வெற்றி பெற்ற ஒசாகாவால் அதை கொண்டாடக் கூட முடியவில்லை. அந்த போட்டியை காண வந்த ரசிகர்கள் செரீனாவுக்கு எதிராக சப்தம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
உணர்ச்சிவசப்பட்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை இழந்துள்ளார் செரீனா. கவனத்தை தக்க வைத்த இளம் வீராங்கனை ஒசாகா வெற்றி வாகை சூடினார்.