பிரெஞ்ச் ஓபன் ஷாக்கிங்.. ஷரபோவாவுடன் மோதவிருந்த செரீனா திடீர் விலகல்!
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நான்காவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவின் மரிய ஷரபோவா மோதவிருந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் செரீனா போட்டியிலிருந்து விலகி விட்டார்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு செரீனாவை வெல்ல ஷரபோவா தயாராக இருந்தார். ஆனால் அது கனவாகி விட்டது. கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று இரவு நடந்த மகளிர் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டத்தில் வென்று அமெரிக்காவின் மடிசன் கீஸ், யுஎஸ் ஓபன் சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
ஆண்கள் பிரிவில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் மார்கோ செகினாடோ ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

சரியான போட்டி
இன்று மகளிர் 4வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவின் மரிய ஷரபோவா மோதவிருந்தனர். இதற்கு முன் இருவரும் 21 முறை நேரடியாக சந்தித்துள்ளனர். அதில் 19 முறை செரீனா வெற்றி பெற்றுள்ளார்.

கனவாகிப் போன வனவாசம்
ஷரபோவாவுக்கு எதிராக தொடர்ந்து 18 ஆட்டங்களில் செரீனா வென்றுள்ளார். கடைசியாக, 2004ல் ஷரபோவா வென்றார். கடந்த 14 ஆண்டுகளாக செரீனாவே தொடர்ந்து வென்றுள்ளார்.

மீண்டு வந்தவர்கள்
36 வயதாகும் செரீனா வில்லியம்ஸ், ஒரு குழந்தைக்கு தாயாகி, 16 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கவிருந்தார். 31 வயதாகும் ஷரபோவா, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி தடை விதிக்கப்பட்டு மீண்டும் வந்துள்ளார்

முக்கியமான ஆட்டம்
இந்த பிரெஞ்ச் ஓபனில் மிகவும் பரபரப்பான, எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருந்தது இந்த ஆட்டம். 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செரீனாவைவிட, 5 கிராண்ட் ஸ்லாம் வென்றுள்ள ஷரபோவா உடல்தகுதியுடன் உள்ளதால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வெல்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
கடும் ஏமாற்றம்
ஆனால் அனைவருக்கும் ஏமாற்றம் தரும் வகையில் போட்டியிலிருந்து செரீனா திடீரென விலகி விட்டார். அவரது விலகலுக்குக் காரணம் சுளுக்கு. இதுகுறித்து செரீனா கூறுகையில் என்னால் ஆட முடியாத நிலை. சுளுக்கு ஏற்பட்டுள்ளது. கடும் ஏமாற்றமடைந்துள்ளேன். இந்த போட்டிக்காக எனது குடும்பம், குழந்தையை விட்டு விலகியிருந்தேன். எனவே இது பெரும் வருத்தமாக இருக்கிறது என்றார் செரீனா.
கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றிலிருந்து பாதியில் செரீனா விலகுவது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications