பாரிஸ்: டென்னிஸ் விளையாடும் ஒவ்வொருவருக்கும் உள்ள கனவு, கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வதுதான். ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலப், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கி 9 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பட்டத்தை வென்றுள்ளார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் பாரிஸில் நடக்கின்றன. இதில் மகளிர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை 3-6, 6-4, 6-1 என்ற செட்களில் வென்று ருமேனியாவின் சிமோனா ஹாலப் பட்டம் வென்றார்.
தற்போது உலகின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள ஹாலப், 2010ல் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்றார். இதில் நான்கு முறை மட்டுமே பைனல் வரை நுழைந்துள்ளார்.
பிரெஞ்ச் ஓபனில் மூன்றாவது முறையாக பைனல் நுழைந்த அவர், ஸ்லோனுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் செட்டில் தோல்வியடைந்தார். ஆனால், சுதாரித்து அடுத்த இரண்டு செட்களையும் வென்றார். இதற்கு முன் 2014 மற்றும் 2017ல் பிரெஞ்ச் ஓபனில் பைனல் வரை நுழைந்தார். ஆஸ்திரேலிய ஓபனில் இந்தாண்டு பைனலில் விளையாடினார்.
இந்தாண்டு செரீனா வில்லியம்ஸ், மரிய ஷரபோவா போன்றோர் களமிறங்கியதால், அவர்களில் ஒருவர்தான் பட்டம் வெல்வார்கள் என்று நினைக்கப்பட்டது. ஆனால், காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் செரீனா போட்டியில் இருந்து விலகினார். ஷரபோவா தோல்வியடைந்து வெளியேறினார்.
ஆடவர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடால் 11வது முறையாக பைனல் நுழைந்துள்ளார். ஆஸ்திரியாவின் டொமினிக் தியாமை அவர் பைனலில் சந்திக்க உள்ளார்.