லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டிகளில் இந்திய வீரர் லியாண்டர் பயஸ் உடன் ஜோடி சேர்ந்து ஆட மகேஷ் பூபதி, ரோகன் போப்பண்ணா ஆகிய 2 வீரர்களும் மறுப்பு தெரிவித்தனர். இதில் அதிருப்தி அடைந்த அகில இந்திய டென்னிஸ் சங்கம், மகேஷ் பூபதி, ரோகன் போப்பண்ணா ஆகிய 2 வீரர்களுக்கும் 2 ஆண்டுகள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது.
இதை கண்டித்த மகேஷ் பூபதி, தன் மீதான இந்த தடை நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்று நேற்று தெரிவித்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களின் கூட்டத்தில் பேசிய அவர், தனக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்து, அகில இந்திய டென்னிஸ் சங்கம் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இன்று நான் இருக்கும் இந்த நிலைக்கு காரணம் டென்னிஸ் விளையாட்டு தான். கடவுளின் ஆசியுடன் இன்று எனது போட்டிக்கு (டென்னிஸ்) நன்றி கடனை செலுத்தி வருகிறேன். இதற்காக டென்னிஸ் போட்டிகளை நடத்துகிறேன். டென்னிஸ் ஆடுகளங்களை கட்ட நிதி திரட்டி கொடுக்கிறேன். மேலும் வளரும் இளம் டென்னிஸ் வீரர்களுக்கு நிதியுதவி செய்கிறேன். நாட்டின் பல இடங்களில் டென்னிஸ் அகடமியை துவங்க உதவி வருகிறேன்.
டென்னிஸ் வீரர்களின் வாழ்க்கை பயணத்தில் குறுக்கிடும் இந்திய டென்னிஸ் சங்கம், எங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது இல்லை. இதற்காக விதிமுறைகளை கூட மாற்றி, டென்னிஸ் சங்கத்தின் அனுமதியின்றி எங்களால் செயல்பட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
எனக்கும், லியாண்டர் பயஸூக்கு இடையிலான பிளவை, அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் தலைவர் அனில் கண்ணா நன்றாக பயன்படுத்தி கொண்டார். இந்திய டென்னிஸ் அணியில் பிளவை ஏற்படுத்திய அவர், விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளார். மேலும் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸின் மூலம் எனக்கு சிக்கலை ஏற்படுத்த பலமுறை முயன்றார். இதை தவறான புரிந்து கொண்ட ஊடகங்கள், எனக்கும், லியாண்டர் பயஸூக்கும் இடையிலான உறவில் பிளவு இருப்பதாக செய்திகளை வெளியிட்டன.
இந்திய டென்னிஸ் சங்கத்தில் உள்ள 80 சதவீதத்திற்கும் அதிகமான நிர்வாக உறுப்பினர்கள், கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களால் தற்போதைய இந்திய டென்னிஸ் வீரர்களான கிருஷ்ணன், அம்ரித்ராஜ், லியாண்டர் பயஸ், ரோகன் போபண்ணா, சோம்தேவ், வீராங்கனை சானியா மிர்சா உட்பட யாருக்கும் எந்த பயனும் கிடைக்கவில்லை.
நிர்வாக உறுப்பினர்கள் தங்களின் பதவியை காப்பாற்றி கொண்டு, இந்திய டென்னிஸ் சங்கத்தில் தங்களின் பெயர் வர வேண்டும் என்று விரும்புகின்றனர். அகில இந்திய டென்னிஸ் சங்க தலைவர் அனில் கண்ணா உடன் நட்பாக பழக நான் பல முறை முயன்றேன். ஆனால் அதற்கு முன்வராத அவர், அனைத்தும் தனது கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
என் மீது விதிக்கப்பட்ட தடையை விருப்பமில்லாவிட்டாலும், அதை ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இது குறித்து யாரிடம் புகார் அளிப்பது என்று தெரியவில்லை. என் மீதான பகை உணர்விற்கு, எனது நண்பர் ரோகன் போப்பண்ணாவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது சம்பவம் வருத்தம் அளிக்கிறது. என் மீது தடை விதிக்கப்பட்டதன் மூலம் நான் இத்தனை நாள் டென்னிஸ் போட்டிக்காக ஆற்றிய பணிகளுக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது.
எனக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக அகில இந்திய டென்னிஸ் சங்கம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது என்றார்.