பாரீஸ்: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் மகேஷ் பூபதி-சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் நேற்று நடைபெற்ற காலுறுதி போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி, செக் குடியரசின் கெவிட்டா பெஷ்கே, அமெரிக்காவின் மைக் பிரையன் ஜோடியை எதிர்கொண்டது.
கலப்பு இரட்டையர் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பெஷ்கே-பிரையன் ஜோடி துவக்கம் முதலே சிறப்பாக ஆடியது. ஆனால் தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள இந்திய ஜோடி 4 முறை பிரேக் பாயிண்டுகளை தவிர்த்தது.
ஒரு மணிநேரம் தொடர்ந்த பரபரப்பான போட்டியில் இந்திய ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்களில் அபார வெற்றிப் பெற்றது. இதன் மூலம் பிரெஞ்சு ஓபன் தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்திய ஜோடி தகுதிப் பெற்றது. கடந்த 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்ற பூபதி-சானியா ஜோடி வென்றுள்ளது.
மற்றொரு இந்திய வீரரான லியாண்டர் பயஸ், ரஷ்யாவின் எலினா வெஸ்னினா உடன் ஜோடி சேர்ந்து, முதல் நிலை ஜோடியான லீசெல் ஹூபர், மேக்ஸ் மிர்னி ஜோடியை மற்றொரு காலுறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது.