பயஸூம், பூபதியும் பொது இடத்தில் 'பைட்' போட கூடாது-விஸ்வநாதன் ஆனந்த்

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய வீரர்களான லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோர் ஆண்கள் இரட்டையர் அணியில் ஜோடி சேர்க்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் லியாண்டர் பயஸ் உடன் விஷ்ணு வரதன் ஜோடி சேர்க்கப்பட்டார்.
இதனால் இந்திய டென்னிஸ் ரசிகர்கள் இடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டது. லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகிய இருவரும் மாறி மாறி மறைமுகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மகேஷ் பூபதியும், லியாண்டர் பயஸூம் இடையிலான பிரச்சனையை பொதுவாக பேசி கொள்ள கூடாது என்று இந்திய சதுரங்கம் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். விளையாட்டு உலகில் இது சகஜம். ஆனால் அதை பொதுவாக பேசி கொள்வது சரியில்லை. தங்கள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை தனிமையில் இருக்கும் போது பேசி தீர்த்து கொள்ள வேண்டும். இதன் மூலம் கருத்து வேறுபாடுகளை முடிவுக்கு கொண்டு வரலாம்.
கடந்த ஒலிம்பிக் போட்டியை (பெய்ஜிங்) விட இந்த ஆண்டு அதிக பதக்கங்களை இந்தியா பெறும் என்று நம்புகிறேன். பாட்மிண்டன், தடகளம், துப்பாக்கி சுடுதல் ஆகிய விளையாட்டுகளில் இந்தியாவிற்கு பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு அதிகம். டென்னிஸ் போட்டியிலும் கூட பதக்கம் பெற வாய்ப்புள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்தியர்கள் பதக்கம் பெற வாழ்த்துகிறேன். நான் அவர்களுக்காக பதக்கம் வெல்ல ஐடியா எதுவும் கொடுக்க முடியாது. ஆனால் வாழ்த்துக்களை தெரிவிக்க முடியும். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் இந்திய வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று நம்புகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications