
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் உடன் ஜோடி சேர்ந்து ஆட மகேஷ் பூபதி, போபண்ணா ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் இளம்வீரர் விஷ்ணுவர்தன் உடன் லியாண்டர் பயஸ் ஜோடி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நாட்டின் நலன் கருதி சிறந்த ஆண்கள் இரட்டையர் ஜோடியான லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோர் லண்டன் ஒலிம்பிக் இணைந்து ஆடியிருக்கலாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிய கங்குலி, ரசிகர்களிடம் வாழ்த்துகளை பெற்று கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் லியாண்யர் பயஸ் சிறப்பாக விளையாடக் கூடியவர். எனவே நாட்டின் நலன் கருதி மகேஷ் பூபதி, ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸ் உடன் ஜோடி சேர்ந்து ஆட சம்மதித்து இருக்கலாம்.
பெங்கால் அணிக்கு பிஷன் சிங் பேடி சுழற்பந்து பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்திருப்பதாக கேள்விபட்டேன். இவரது பயிற்சியின் மூலம் பெங்கால் கிரிக்கெட் அணியின் வீரர்கள் திறமையை வளர்த்து கொள்ள முடியும். இவரது அனுபவம் பெங்கால் அணியின் வெற்றிகளுக்கு உதவும் என்று நம்புகிறேன்.
பெங்கால் அணியின் முழுநேர பேட்டிங் பயிற்சியாளராக நான் செயல்பட முடியாது. பெங்கால் அணியின் பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி தற்போது சிறப்பான பார்மில் உள்ளார். எனவே இலங்கைக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவார் என்று நினைக்கிறேன்.
புனே வாரியர்ஸ் அணியுடன் எனக்கு இன்னும் ஒராண்டு ஒப்பந்தம் நீடிக்கிறது. திறமையும், உடற்தகுதியும் இருந்தால் எந்த வயதிலும் கிரிக்கெட் விளையாடலாம். என்னை பொறுத்தவரை வாழ்கை என்பது எளிதானது. இதில் 39, 40, 41 என்ற வயது வித்தியாசம் ஒரு பொருட்டல்ல. இது ஒரு எண்ணாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
ஷேவாக்கை பொறுத்தவரை தற்போது பேச்சை குறித்து கொண்டு, ஆடுகளத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.