அடுத்த ஏடிபி சீசனிலிருந்து இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகிறதாம். தாங்கள் பிரிவதை பூபதியும், போபண்ணாவும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போபண்ணா தரப்பு கூறுகையில், ரோஹனும், ராஜீவ் ராமும் சில மாதங்களுக்கு முன்பே சேர்ந்து விளையாட தீர்மானித்தனர். இவர்களது இணை மிகவும் வலுவாக அமையும். இருவருக்கும் தனித் தனி ஸ்டைல் உள்ளது. அது நிச்சயம் இவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
பூபதியும், ரோஹனும் இணைந்து இந்த ஆண்டு இரண்டு பட்டங்களை வென்றுள்ளனர். லண்டன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் 2வது இடத்தைப் பிடித்தனர். இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி 8வது ரேங்க்கில் இருக்கிறார். ரோஹன் போபண்ணா 33வது இடத்தில் இருக்கிறார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக இந்திய டென்னிஸ் அரங்கில் பெரும் பிரளயம் ஏற்பட்டது. இதற்குப் பிள்ளையார் சுழி போட்டது மகேஷ் பூபதியும், போபண்ணாவும்தான். லியாண்டர் பயஸை குறி வைத்து இருவரும் 'விளையாடியதாக' குற்றச்சாட்டு எழுந்தது. இதன் விளைவாக பூபதியையும், போபண்ணாவையும் இந்தியடென்னிஸ் சம்மேளனம் தடை விதித்தது என்பது நினைவிருக்கலாம்.