
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் 31.12.2012 முதல் 6.1.2013 வரை நடத்தவுள்ள சென்னை ஓபன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்தக் கோரிக்கையை பரிசீலித்த முதல்வர், மக்களின் பெரும் வரவேற்பினை பெற்ற உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களும், இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களும் பங்கு கொள்ளும் சென்னை ஓபன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் வழங்குவதற்கு உத்திரவிட்டிருந்தார். இந்தக் தொகைக்கான காசோலையினை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் திரு. எம்.ஏ.அழகப்பன் அவர்களிடம் வழங்கி, இந்த டென்னிஸ் போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்ற தனது விருப்பத்தினைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் கௌரவ செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.