சென்னை: நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஐபிஎல் தொடரை போல, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் போட்டிகளும் நடத்தி இளம்வீரர்களை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் வகையிலும், கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே நட்பு ஏற்படவும் ஐபிஎல் தொடர் துவங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் வருமானத்தை ஈட்டி தரும் ஐபிஎல் தொடர், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதேபோல இந்தியாவில் டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் போட்டிகளுக்கும் தொடர்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டென்னிஸ்:
அகில் இந்திய டென்னிஸ் வாரியத்தின் சார்பில் நடத்தப்பட உள்ள இந்திய டென்னிஸ் லீக் தொடர் வரும் டிசம்பர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன. அணிக்கு 10 வீரர்கள் வீதம் ஓவ்வொரு அணியிலும் 2 வெளிநாட்டு வீரர்களும், 4 தேசிய வீரர்களும், 2 இளம் வீரர்களும் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளனர். இத்தொடரில் வெற்றிப் பெறும் அணிக்கு கோப்பையும், பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
பேட்மிண்டன்:
தமிழகம் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கம் மற்றும் கேம் பாய்ண்ட் ஆகிய பேட்மிண்டன் சங்கங்கள் இணைந்து பேட்மிண்டன் தொடரை நடத்த உள்ளன. தமிழக அளவில் நடைபெற உள்ள இத்தொடருக்கு, தமிழ்நாடு பேட்மிண்டன் லீக் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதில் சென்னை சிங்கம், திருச்சி டெல்டா வாரியர்ஸ், கோவை பேன்தர்ஸ், மதுரை டெம்பிள் சிட்டி நைட்ஸ், சென்னை டேசல் போர்ஸ், ஈரோடு ஈகில்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்க உள்ளன.
வரும் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியிலும் வெளிநாட்டு வீரர்கள், தேசிய மற்றும் மாநில அளவிலான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.