
லியாண்டர் பயஸுக்கும், மகேஷ் பூபதிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட சானியாவும் ஒரு காரணம் என்று கூறப்படுவதுண்டு. காரணம், சானியாவுடன் இணைந்து ஆடுவது தொடர்பாகவே இருவருக்குள்ளும் அப்போது மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் வென்றவர் மகேஷ் பூபதி, காரணம், லியாண்டரைத் தவிர்த்து விட்டு மகேஷுடன் இணைந்து ஆட முன்வந்தார் சானியா என்பதால்.
இந்த நிலையில் தற்போது லண்டன் ஒலிம்பிக் போட்டியை மையமாக வைத்து இந்திய டென்னிஸ் வீரர்கள் பிளந்து போய்க் கிடக்கும் இந்த நேரத்தில் இதுவரை வாய் திறக்காமல் இருந்து வந்தார் சானியா. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அவருக்கு வைல்ட் கார்ட் என்ட்ரி கிடைக்குமா என்ற சந்தேகமே அதற்குக் காரணம். தற்போது அவருக்குக் என்ட்ரி கிடைத்து விட்டது. இதையடுத்து வாய் திறந்துள்ளார் சானியா.
ஆரம்பத்திலிருந்தே இவர் பூபதியுடன் இணைந்து ஆடவே விரும்புவார். இப்போதும் பூபதியுடன் இணையவே விரும்பினார். ஆனால் இந்திய டென்னிஸ் சங்கம், சானியாவை பயஸுடன் இணைந்து விளையாடுமாறு பணித்துள்ளது. இதனால் கோபத்தில் உள்ளார் சானியா.
லண்டன் ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பூபதி-போபண்ணா ஜோடியும், பயஸ்-விஸ்ணுவர்தன் ஜோடியும் பங்கேற்க உள்ளனர். அதேபோல கலப்பு இரட்டையர் பிரிவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சானியா-லியாண்டர் பயஸ் ஜோடி களமிறங்குகிறது.
இது குறித்து சானியா கூறுகையில்,
லியாண்டர் பயஸ் உடன் ஜோடி சேர்ந்து விளையாடுவதில் நான் பெருமைப்படுகிறேன். ஆனால் இந்த அறிவிப்பை அகில இந்திய டென்னிஸ் சங்கம் வெளியிட்ட நேரம் தான் வருத்தம் அளிக்கிறது.
கடந்த 3 வாரங்களுக்கு முன் 2 கிராம்ஸ்லாம் பட்டங்களை வென்ற மகேஷ் பூபதி-சானியா மிர்சா ஜோடியை பிரித்துவிட்டு, என்னை பயஸ் உடன் ஜோடி சேர்த்துள்ளனர். இதனால் நாங்கள் வென்ற கிராம்ஸ்லாம் பட்டங்களுக்கு மதிப்பு இல்லாமல் போனதாக உணர்கிறேன்.
லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதியை சமாதானப்படுத்த நான் பயன்படுத்தப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்திய டென்னிஸ் சங்கம் வீரர்களை தேர்வு செய்வதில் என்னை கவர்ச்சிப் பொருளாக பயன்படுத்திக் கொண்டது. 21ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியப் பெண்ணான நான் ஏமாற்றப்பட்டேன்.
இது இந்திய பெண் இனத்துக்கே ஏற்பட்ட அவமானம். ஆண் ஆதிக்கத்தை குறிக்கும் இது போன்ற செயலில் இந்திய டென்னிஸ் சங்கம் போன்ற பெரிய நிர்வாகம் ஈடுபட்டாலும் கண்டனத்துக்குரியது. நம் நாட்டிலேயே மிக உயர்ந்த டென்னிஸ் அமைப்பில் இருந்து இதுபோன்ற நிலை எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது.
இதுவரை என்னுடன் ஜோடி சேர்ந்து விளையாட எந்த வீரருக்கு நான் மறுப்பு தெரிவித்தது இல்லை. ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவில் என்னுடன் ஜோடி சேர்ந்து ஆட இந்தியாவில் லியாண்டர் பயஸ் தகுதியானவர் அல்ல.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 206வது தரவரிசையில் உள்ள வீரரான விஷ்ணுவர்த்தனுடன் பயஸ் விளையாட சம்மதித்துள்ளார். ஆனால் பயஸின் தந்தை என்னிடம் மகனுடன் விளையாடுவது குறித்த ஒப்பந்தத்தை எழுத்துப்பூர்வமாக கேட்கிறார். இதுபோல் என்னை நிர்ப்பந்திக்க முடியாது.
விஷ்ணுவர்தன் போன்ற சிறந்த வீரர்தான், என்னுடன் ஜோடி சேர்ந்து ஆட தகுதியானவர் என்பதை லியாண்டர் பயஸிற்கு எடுத்து கூற விரும்புகிறேன். நான் விஷ்ணுவர்தன் உடன் ஜோடி சேர்ந்து ஆடி கடந்த 2010ம் ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளேன்.
மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா உடன் ஜோடி சேர்ந்து ஆடுவது இந்திய அணிக்கு நல்லது. மகேஷ் பூபதி உடன் ஜோடி சேர்ந்து கலப்பு இரட்டையரில் பங்கேற்க விரும்பினேன். ஆனால் இந்திய அணியின் நலம் கருதி பயஸ் உடன் சேர்ந்து விளையாடுகிறேன். ஒவ்வொரு வீரருக்கும் சிறப்பு தன்மை உள்ளது. நாட்டிற்கு பதக்கம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மகேஷ் பூபதி தனக்கு சிறந்த ஜோடியை தேர்வு செய்துள்ளார் என்று நம்புகிறேன் என்றார்.
சானியா இப்படிக் கூறியிருப்பதன் மூலம் அவருடன் பயஸ் எப்படி சேர்ந்து விளையாடப் போகிறார் என்று தெரியவில்லை. ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்கும் முடிவை அவர் எடுக்கலாம் என்று தெரிகிறது.