டெல்லி: இரட்டையர் பிரிவில் சிறந்த வீரரான இந்தியாவின் மகேஷ் பூபதி, டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து தானாக விலகிக் கொண்டார். இதனால் இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் இந்திய அணியில் ரோகன் போபண்ணா, லியாண்டர் பயஸ் ஜோடி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதும், ஆசிய/ ஓசியானா பிரிவு-1 மண்டலத்துக்கான டேவிஸ் கோப்பை போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 6 முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதில் இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் ஜோடி பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரட்டையர் பிரிவில் பயஸ் உடன் ரோகன் போபண்ணா இணைந்து சிறப்பாக ஆடி வருகின்றார். இதனால் மகேஷ் பூபதி, டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து தானாக விலகி கொண்டார்.இது குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் செயலாளர் அனில் கண்ணா கூறியதாவது,டேவிஸ் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் விளையாட மகேஷ் பூபதி விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் ஆஸ்திரேலிய ஓபனில் பயஸ்- போபண்ணா ஜோடி சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் உலக இரட்டையர் தரவரிசையில் போபண்ணா 8வது இடத்தில் உள்ளார்.இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடி வரும் போபண்ணா, தேவைப்பட்டால் ஒற்றையர் பிரிவிலும் விளையாடுவார். இதனை கருத்தில் கொண்டே பூபதி, டேவிஸ் கோப்பையில் இருந்து விலகி இருப்பார் என்று கருதுகின்றேன்.அதேபோல காயமடைந்துள்ள சோம்தேவ் தேவ்வர்மன் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இளம்வீரர்களான யூகி பாம்ப்ரி, சனம் சிங் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணி: லியாண்டர் பயஸ், ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி, சனம் சிங், விஷ்ணுவர்தன் (ரிசர்வ்).இந்திய அணியின் கேப்டனாக எஸ்.பி.சர்மாவும், பயிற்சியாளராக நந்தன் பாலும் செயல்படுவர்.