
உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவர் நடேல். இதுவரை 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்றில் தோல்வி அடைந்த பிறகு எந்தப் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்த அவர் திடீரென நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் நடேல் கூறியுள்ளதாவது:
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கக் கூடிய வகையில் உடல்நிலை இல்லை. இதனால் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் ஸ்பெயின் அணியில் இருந்து விலகுகிறேன். கடைசி நிமிடம் வரை முயற்சித்தேன். ஆனால் பயனில்லாமல் போய்விட்டது.
ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஸ்பெயின் அணிக்கு தலைமையேற்று நாட்டின் தேசிய கொடியேந்தி செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. என் வாழ்நாள் கனவும் கூட அது. ஆனால் அது இப்போது நிறைவேறாமல் போய்விட்டது. எனது டென்னிஸ் வாழ்க்கையில் சோகமான நாட்களில் இதுவும் ஒன்று என்று கூறியுள்ளார்.
பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.