டெல்லி: டேவிஸ் கோப்பை போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி விட்டார் லியாண்டர் பயஸ். இந்திய டென்னிஸ் அணி அடுத்த மாதம் ருமேனியாவுடன் டேவிஸ் கோப்பைப் போட்டியில் மோதவுள்ளது. இதற்கான இந்திய அணியின் கேப்டனாக லியாண்டர் பயஸ் நியமிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் பயஸுக்கு எதிராக மகேஷ் பூபதி தலைமையில் இந்திய வீரர்கள் திரண்டனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தங்களது கருத்து வேறுபாடுகளை விட்டு விட்டு பூபதியும், பயஸும் இணைந்து விளையாடினர். இந்தச் சூழ்நிலையில் டேவிஸ் கோப்பை அணிக்கான கேப்டன் பதவியிலிருந்து லியாண்டர் விலகியுள்ளார். இதைத் தொடர்ந்து எஸ்.பி.மிஸ்ரா இந்திய அணியின் விளையாடாத கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து பயஸ் விலகியிருந்தாலும் கூட வீரராக அணியில் இடம் பெற்றுள்ளார். தனது முடிவை இந்திய டென்னிஸ் சங்க செயல் துணைத் தலைவர் அனில் கண்ணாவிடம் தெரிவித்துள்ளார். சிறந்த அணியை போட்டியில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். எந்தவிதமான கருத்து வேறுபாடும், சச்சரவுகளும் இருக்கக் கூடாது. குறிப்பாக யாருக்கும் சந்தேகம் எழக் கூடாது என்பதற்காக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக பயஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹன் போபண்ணாவுக்குப் பதில் சோம்தேவ் தேவராமன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஜப்பானுக்கு எதிரான டேவிஸ் கோப்பைப் போட்டியில் முதன் முதலில் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி விவரம்: லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சோம்தேவ் தேவராமன், பிரகாஷ் அமிர்தராஜ்.