பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்திய, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக நடால் வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 2வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் உடன் மோதினார்.
விறுவிறுப்பான இப்போட்டியில் ரபேல் நடால் முதல் 2 செட்களில் 6-4, 6-3 என்று வெற்றிப் பெற்றார். ஆனால் 3வது செட்டில் நடால் 2-6 என்ற புள்ளிகளுடன் தோல்வியை தழுவி பின்தங்கினார். ஆனால் 4வது செட்டில் 1-2 என்று நடால் முன்னிலை பெற்ற நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நடுவர்களால் ஒத்தி வைக்கப்பட்டது.
நேற்று மீண்டும் துவங்கிய 4வது செட்டின் மீதமுள்ள ஆட்டம் துவக்கம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. இரு வீரர்களும் மாறி மாறி சர்வீஸ் பயிண்டுகள் எடுக்க, புள்ளிகள் தடபுடலாக உயர்ந்தது. இந்த நிலையில் கடைசி வரை போராடிய நாடல் 4வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிப் பெற்றார்.
இதன்மூலம் இறுதிப்போட்டியில் நடால் 6-4, 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பிரெஞ்ச் ஓபன் கோப்பை வென்ற நடாலுக்கு ரூ.8.75 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இதன்மூலம் பிரெஞ்ச் ஓபன் நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்ட நடால், முன்னதாக 2005-08, 2010-11ல் நடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார். மேலும் 6 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்ற பிஜோர்ன் போர்க்கின் சாதனையையும் நடால் முறியடித்து உள்ளார்.
நடாலிடம் தோல்வியை தழுவிய ஜோகோவிச் 43 ஆண்டுகளுக்கு பின், தொடர்ந்து 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை படைக்கும் கனவும் தகர்ந்தது.
ஆஸ்திரேலிய ஓபன்(2009), விம்பிள்டன்(2008-10), யு.எஸ்.ஓபன்(2010), பிரெஞ்ச் ஓபன்(2005-08, 2010-2012) என்று நடால் இதுவரை மொத்தம் 11 கிராண்டஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.