
இங்கிலாந்து தலைநகர் லண்டன் நகரில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், டென்னிஸ் சர்வதேச தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேயும், 3வது இடத்தில் இருந்த ரோஜர் பெடரரும் நேற்று மோதினர்.
இதில் யார் வெற்றிப் பெற்றாலும், பல சாதனைகளை படைக்கப்பட இருந்தது. ஆன்டி முர்ரே வெற்றிப் பெற்றால், விம்பிள்டன் தொடரில் கடந்த 76 ஆண்களுக்கு பிறகு இங்கிலாந்து வீரர் ஒருவர் பட்டத்தை வென்றதாக சாதனை நிகழ்த்தப்பட இருந்தது. அதேபோல ரோஜர் பெடரர் வெற்றிப் பெற்றால், 7 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற பீட் சாம்பிராஸின் சாதனையை சமன் செய்ய வாய்ப்பு இருந்தது.
இந்த நிலையில் துவக்கத்தில் சிறப்பாக விளையாடிய இருவரும் மாறி மாறி புள்ளிகளை சேர்த்தனர். முதல் செட்டை கடும் போராட்டத்திற்கு பிறகு ஆன்டி முர்ரே 6-4 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.
ஆனால் 2வது செட்டில் பதிலடி கொடுத்த பெடரர் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால் 3வது செட்டில் யார் வெற்றிப் பெறுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் போட்டியின் இடையே மழைக் குறுக்கிட்டதால், போட்டி சற்றுநேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் துவங்கியது. ஆனால் பெடரர் தொடர்ந்து துடிப்புடன் விளையாடி மீதம் இருந்த 2 செட்களை கைப்பற்றினார். இதன் மூலம் 3 மணிநேரம் 16 நிமிடங்கள் தொடர்ந்த இப்போட்டியில், ரோஜர் பெடரர் 4-6, 7-5, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.
இதன்மூலம் 7வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்று, அமெரிக்காவின் பீட்சாம்பிராஸ், இங்கிலாந்தின் வில்லியம் ரென்ஷா ஆகியோரின் சாதனைகளை ரோஜர் பெடரர் சமன் செய்தார்.
மேலும் சர்வதேச டென்னில் வீரர்களின் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடத்தை தக்க வைத்த வீரர் என்ற பீட்சாம்பிராஸின் சாதனை(286 வாரம்) ரோஜர் பெடரர் முறியடித்தார்.
ஆண்களில அதிக ஒற்றையர் கிராண்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்(17 முறை) என்ற சாதனையையும் படைத்தார். இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்ற ரோஜர் பெடரருக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.