லண்டன் ஒலிம்பிக்: லியாண்டர் பயஸ் இடம் 'ரெடி'-வைல்டு கார்டை நம்பி சானியா!
டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் நேரடியாக தகுதிப் பெற்றுள்ளார். ஆனால் பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவின் சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்சா, மகேஷ் பூபதி ஆகியோர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வைல்டு கார்டை நம்பி உள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் (ஜூலை) 27ம் தேதி முதல் துவங்குகிறது. இதில் கலந்து கொள்ள உள்ள இந்திய வீரர்கள், வீராங்கணைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உலக டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகளில் நேரடியாக நுழைய முடியும்.
இதற்காக தரவரிசைப்பட்டியல் கணக்கிடும் கடைசி நாள் கடந்த 11ம் தேதியுடன் முடிவடைந்தது. அப்போது அறிவிக்கப்பட்ட புதிய தரவரிசையில் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பயஸ் 7வது இடத்தை பெற்றார். இதனால் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க அவருக்கு இடம் கிடைத்தது.
ஆனால் பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்ற மகேஷ் பூபதி 14வது இடத்திலும், சானியா மிர்சா 12வது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான ரோகன் போபண்ணா 12வது இடத்தில் உள்ளார். இதனால் மேற்கண்ட 3 பேரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் நேரடி வாய்ப்பு பெற தவறிய வீரர்களுக்கு வைல்டு கார்டு மூலம் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் மொத்தம் 4 வைல்டு கார்டு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் ஏற்கனவே பராகுவேயின் வெரோனிகா சிபெட் மற்றும் ஸ்டீபனி வோக் ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 வைல்டு கார்டுகளை பெற இந்திய ஒலிம்பிக் வாரியம் முயன்று வருகிறது.
இதனால் சானியா மிர்சா, மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஆகியோரில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் லியாண்டர் பயஸூடன் இரட்டையர் போட்டியில் ஜோடி சேர்வது யார் என்ற கேள்வியும் தொடர்கிறது.


Click it and Unblock the Notifications