இன்டியன்வெல்ஸ்: பி.என்.பி.பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா வெற்றிப் பெற்றார். இதன் மூலம் 2வது சுற்றில் விளையாட அவர் தகுதிப் பெற்றுள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இன்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி.பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜெர்மனியின் கிறிஸ்டினா பார்ரோசை எதிர் கொண்டார்.முதல் செட் 4-6 என்ற கணக்கில் இழந்த சானியா, அதன்பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2 மணி நேரம் தொடர்ந்த இப்போட்டியின் இறுதியில் 4-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா வெற்றிப் பெற்றார். இதன் மூலம் உலக டென்னிஸ் பட்டியலில் 130வது இடத்தில் உள்ள சானியா, இரண்டாவது சுற்றில் பங்கேற்க தகுதிப் பெற்றார்.2வது சுற்றில் சானியாவுடன், தரவரிசையில் 24வது இடத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் அனபெல் மெடினா கேர்ரிகஸ் மோத உள்ளார்.இத்தொடரில் சர்வதேச அளவில் சிறந்த டென்னிஸ் வீராகனைகளான ரஷ்யாவின் மரிய ஷரபோவா, செக் குடியரசின் கிவிடோவா, டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் விளையாடி வருகின்றனர். இத்தொடரில் சாம்பியன் பட்டம் பெறும் வீராங்கனைக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.