தோஹா: தோஹாவில் தொடங்கியுள்ள கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற சானியா மிர்ஸா, காயத்துடன் பாதியிலேயே வெளியேறினார். தோஹாவில் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கியுள்ளது. இதில் சானியா மிர்ஸாவும் கலந்து கொண்டார். இன்று நடந்த முதலாவது சுற்றுப் போட்டியில் பெலோருஷ்யா வீராங்கனை ஓல்கா கோவர்ட்சோவாவுடன் அவர் மோதினர். இதில் முதல் செட்டில் ஓல்கா வென்றார். 2வது செட்டை கஷ்டப்பட்டு கைப்பற்றினார் சானியா. 3வது செட் ஆட்டத்தின்போது 2-3 என்ற புள்ளிக்கணக்கில் சானியா பின்தங்கியிருந்தார். அப்போது அவருக்கு காலில் பயங்கர வலி ஏற்பட்டது. இதையடுத்து ஆட முடியாமல் தவித்தார் சானியா. போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவிக்கவே, போட்டியில், ஓல்கா வென்றதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில்தான் பெங்களூர் ஓபன் போட்டியில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்திருந்தார் சானியா. இதையடுத்து கத்தார் ஓபன் போட்டியில் பங்கேற்றார். ஆனால் முதல் போட்டியிலேயே அவர் காயத்துடன் வெளியேறியுள்ளது இந்திய டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.