
ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா, ருஷ்மி ஜோடி முதல் சுற்றில் தைபே ஜோடி சு வீ ஷே, சியா ஜங் சுவாங் ஜோடியை சந்தித்தது. ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த முதல் சுற்றுப் போட்டியில் சானியா ஜோடி 1-6, 6-3, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
இதனால் இந்தியாவின் இரட்டையர் டென்னிஸ் பதக்கக் கனவு முதல் சுற்றோடு முடிந்து போனது. ஒலிம்பிக் போட்டிக்குக் கிளம்பும் முன்பே பதக்கத்தையெல்லாம் நாங்கள் உறுதி சொல்ல முடியாது என்று அபசகுணமாக பேசியிருந்தார் சானியா என்பது நினைவிருக்கலாம்.
மேலும் நேற்றைய ஆட்டத்தில் சானியாவும் சரி, ருஷ்மியும் சரி போராட்டக் குணத்தை வெளிப்படுத்தவே இல்லை என்பதும் ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இனி டென்னிஸ் பிரிவில், ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில்தான் இந்தியா எதையாவது எதிர்பார்க்க வேண்டும் என்ற நிலை.
கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸுடன் இணைந்து சானியா மிர்ஸா ஆடவுள்ளார். இரட்டையர் பிரிவில் இரண்டு ஜோடிகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. லியாண்டர் பயஸ்-விஷ்ணுவர்த்தன் ஒரு ஜோடியாகவும், மகேஷ் பூபதி-ரோஹன் போபண்ணா இன்னொரு ஜோடியாகவும் கலந்து கொண்டுள்ளனர். சோம்தேவ் தேவ்வர்மன் ஒற்றையர் பிரிவில் போட்டியிடுகிறார்.