
டென்னிஸ் உலகில் மிகவும் பிரபலமானது விம்பிள்டன் தொடர். லண்டனில் நடைபெற்று வரும் இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் ஜோகோவிச், 3ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை எதிர் கொண்டார்.
இதில் முதல் செட்டில் ஜோகோவிச் கடுமையாக போராடியும், பெடரர் 6-3 என்று செட்டை கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டில் 3-6 என்ற கணக்கில் இழந்தார். அதன்பிறகு மிதமுள்ள 2 செட்களையும் பெடரர் 6-4, 6-3 எனற செட்களில் கைப்பற்றினார்.
சுமார் 2 மணி 13 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில் ரோஜர் பெடரர் 6-3, 3-6, 6-4, 6-3 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார். இதன் மூலம் பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்த நிலையில் 2வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, பிரான்ஸின் சோங்கா ஆகியோர் மோதினர். இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய முர்ரே முதல் 2 செட்களை 6-3, 6-4 என்று கைப்பற்றினார்.
3வது செட்டில் கடுமையாக போராடிய ஜோ வில் பிரைட் சோங்கா 3-6 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதன்பிறகு 4வது செட்டில் இருவரும் கடுமையாக போராடிய நிலையில் முர்ரே 7-5 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார்.
போட்டியின் இறுதியில் ஆன்டி முர்ரே 6-3, 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார். இதன்மூலம் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ள இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 76 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியனாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றிப் பெற்று சாம்பியனாகும் பட்சத்தில், அதிக முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற பீட்சாம்பிராஸின் சாதனையை அவர் சமன் செய்யலாம். மேலும் உலக டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்து அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்த பீட் சாம்பிராஸின் (286 வாரங்கள்) மற்றொரு சாதனையை சமன் செய்யலாம்.