டெல்லி : 15 வயதான தமிழக டென்னிஸ் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். டெல்லியில் நடைபெற்று வரும் ஐடிஎப் ஜே 300 டென்னிஸ் போட்டியில் மாயா தற்போது அரையிறுதி சுற்று வரை முன்னேறி இருக்கிறார்.
களத்தில் ஆக்ரோஷமாக ஷாட்களை விளையாடி எதிரணி வீராங்கனைகளை மாயா அபாரமாக வீழ்த்தி வருகிறார். கோவையில் பிறந்து வளர்ந்து தற்போது ஸ்பெயினில் உள்ள ரஃபேல் நடால், டென்னிஸ் அகாடமிவில் மாயா பயிற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் மைக்கேல் தமிழ் தளத்திற்கு மாயா அளித்த பிரத்தியேக பேட்டியை தற்போது பார்க்கலாம். சிறுவயதிலே நான் விளையாட்டு வீராங்கனை ஆக தான் ஆக வேண்டும் என்பதில் என்னுடைய தந்தை தெளிவாக இருந்தார். இதற்காக பள்ளி முடிந்தவுடன் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்று டென்னிஸ் பயிற்சியில் பங்கு பெற்றேன்.
பள்ளி படிப்பு முடிந்தவுடன் மற்ற சிறுவர்கள் உடன் இணைந்து நானும் டென்னிஸ் விளையாடினேன். அதன் பிறகு ஒரு ஆண்டில் எனக்கு டென்னிஸ் ரொம்பவும் பிடித்து விட்டது. இதை அடுத்து முறையான பயிற்சியை நான் தொடங்கினேன். கோவையில் உலகத்தரம் வாய்ந்த பல டென்னிஸ் பயிற்சி மையங்கள் இருக்கின்றது. அங்கு திறமையான வீரர்கள் பலர் இருக்கிறார்கள்.
அங்கு நான் இணைந்து டென்னிஸ் பயிற்சியை கடுமையாக மேற்கொண்டேன். நான் டென்னிசில் சாதிப்பதற்கு என்னுடைய பெற்றோர்களின் தியாகம் தான் மிகவும் முக்கியம். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தந்தை எனக்கு உறுதுணையாக இருக்கிறார். நான் உலகம் முழுவதும் பல இடங்களுக்கு சென்று விளையாடும் போது அவர்களுடைய ஆதரவு இல்லாமல் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது.
ஸ்பெயினில் தற்போது ரபேல் நடால் நடத்தும் டென்னிஸ் அகாடமியில் தேர்வாகி பயிற்சி செய்து வருகிறேன். அங்கு எனக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் கிடைக்கிறது. டென்னிஸ் விளையாடுவதற்கு உடல் வலிமை மிகவும் முக்கியம். அதற்கு எனக்கு அங்கு சிறப்பு பயிற்சிகள் கிடைக்கிறது. நடால் ஓய்வு பெறுவதற்கு முன்பு டேவிஸ் கோப்பையில் விளையாடி வந்தார். அப்போது அவர் தீவிர பயிற்சியை மேற்கொண்டார்.
அப்போது நான் நடாலை அருகில் இருந்து பார்த்தேன். அவர் இவ்வளவு சாதித்தும் ஒவ்வொரு முறை பயிற்சி செய்யும் போதும் 100% பங்களிப்பை கொடுத்தார். அவர் இவ்வளவு சாதித்ததற்கு இப்படி பயிற்சி செய்வதுதான் காரணம் என்பதை நான் புரிந்து கொண்டேன். அங்கு பயிற்சி பெற்றது எனக்கு நல்ல அனுபவமாகவும் மேலும் வளர்வதற்கு வாய்ப்பாகவும் அமைந்தது. எனக்கு மகளிர் டென்னிஸ் தான் மிகவும் பிடிக்கும்.
மகளிர் டென்னிசை வெறிகொண்டு பார்ப்பேன். எனக்கு பிடித்த வீராங்கனை, என்னுடைய ரோல் மாடல் என்றால் அது செரினா வில்லியம்ஸ் தான். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் மகளிர் டென்னிசை செரீனா வில்லியம்ஸ் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதேபோன்று சானியா மிர்சாவும் எனக்கு பிடிக்கும். நான் அவரை நேரில் பார்த்ததில்லை என்றாலும் அவருடைய விளையாட்டுத் திறன் குறித்து பலரும் என்னிடம் கூறி இருக்கிறார்கள்.
டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் செல்வதால் பெரிய அளவில் தம்மால் டயட்டை பாலோ செய்ய வாய்ப்பு ஏற்படவில்லை. போட்டிக்கு முன்பு நான் சரியான அளவில் தான் சாப்பிடுவேன். இருந்தாலும் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய அடுத்த இலக்கு ஜூனியர் பிரிவில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கு பெற வேண்டும்.
தற்போது ஆஸ்திரேலிய டென்னிஸ் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ளது. அதில் பங்கேற்க கிடையாது. எனினும் அடுத்த மூன்று கிராண்ட் ஸ்லாம் தொடரிலும் ஜூனியர் பிரிவில் விளையாட முயற்சி செய்வேன். என்னுடைய குறிக்கோளே உலகின் முதல் நிலை வீராங்கனை என்ற பெயரை பெற வேண்டும், பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வெல்ல வேண்டும் என்பதுதான் என்று மாயா ராஜேஸ்வரன் ரேவதி கூறியிருக்கிறார்.