மேஜர்கா: கண்காட்சி டென்னிஸ் போட்டியின் போது தாய் ஒருவர் தனது மகளை தொலைத்துவிட்டு அழுவதை கண்டு நட்சத்திர வீரர் ராபேல் நடால் போட்டியை இடையில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் மன்னாகோர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கண்காட்சி டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரான ஸ்பெயின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் கலந்துகொண்டார். இரட்டையர் பிரிவில் சிமோன் சால்போசுடன் இணைந்து ஒரு போட்டியில் அவர் விளையாடினார்.

அப்போது முன்னாள் நம்பர்-1 வீரர்களான ஜான் மெக்கென்ரோ (அமெரிக்கா)-கார்லோஸ் மோயா (ஸ்பெயின்) ஜோடியை ரபேல் ஜோடி எதிர்கொண்டனர். போட்டியின் போது பந்தை ரபேல் அடிக்காமல் கையில் வைத்துக் கொண்டு பார்வையாளர்களை பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது பார்வையாளர்கள் அனைவருக்கும் புரியவில்லை. அதன் பின் தாய் ஒருவர் தன் குழந்தையை காணவில்லை என கூறி சத்தமிட்டுள்ளார். குழந்தை கிடைக்காததால் அவர் தொடர்ந்து அழுதுள்ளார். இதனால் போட்டியை நடால் இடையில் நிறுத்தினார்.
இதன் மூலம் மைதானத்தில் இருந்த பார்வையாளர்களும் பிரச்னை என்பதை புரிந்து கொண்டு, குழந்தையை தேட தொடங்கினர். மேலும் மைதானத்தில் இருந்த பெரிய திரையில், கண்ணீருடன் அந்த தாய் அழும் காட்சி ஒளிபரப்பப்பட்டது.
பின்னர் சிறிது தொலைவிலே இருந்த அக்குழந்தை, தாயின் அழுகுரலை கேட்டு அழுது கொண்டே சத்தமிட்டது. அதன் பின்னர் தாய், குழந்தையை கட்டிப் பிடித்து அழுத சம்பவம் அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்து.
இதைக் கண்ட ரபேல் நடால் தாயிக்கு குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் இடையில் நின்ற போட்டியை ஆரம்பித்தார். இதன்பின் போட்டி தொடர்ந்து நடந்தது. இதில், 3-6, 6-3, 10-8 என்ற செட் கணக்கில் நடால் ஜோடி வெற்றி பெற்றது. ரபேல் நடாலின் இந்த செயல் வீடியோ எடுக்கப்பட்டதால், தற்போது அந்நாட்டில் உள்ள சமூகவலைத்தளங்களில் ராபேல் நடலாலின் புகழ் வைரலாக பரவி வருகிறது.