ரியோ டி ஜெனீரோ: டென்னிஸில் இந்தியாவுக்கு இருந்த ஒரே பதக்க வாய்ப்பும் நேற்றோடு போய் விட்டது. கலப்பு இரட்டையர் பிரிவில், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா - ரோஹன் போபண்ணா ஜோடி தோல்வியடைந்தது. செக் நாட்டின் ராடக் ஸ்டெபானக் - லூசி ஹிரடசெகா ஜோடி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது.
கலப்பு இரட்டையர் அரை இறுதிப் போட்டியில் தோற்ற இந்திய ஜோடி, வெண்கலப் பதக்கத்திற்கான வாய்ப்பில் இருந்தது இந்திய ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் 1-6, 6-7 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடி தோல்வியைத் தழுவியது.
ஏற்கனவே மகளிர் இரட்டையர், ஆடவர் இரட்டையர் என அனைத்துப் பிரிவுகளிலும் இந்தியா தோல்வியைத் தழுவி வெளியேறி விட்டது நினைவிருக்கலாம்.
ஒலிம்பிக் போட்டிகளில், டென்னிஸில் இதுவரை இந்தியா ஒரே ஒரு பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியின்போது ஒற்றையர் பிரிவில் லியாண்டர் பயஸ் வென்ற வெண்கலப் பதக்கம்தான் அது. அதன் பிறகு இதுவரை இந்தியாவுக்கு பதக்கம் கனவாகவே இருந்து வருகிறது.
நேற்றைய போட்டியில் வென்ற செக் ஜோடியில் ஸ்டெபானக்கிற்கு இதுதான் முதல் ஒலிம்பிக் பதக்கமாகும். லூசிக்கு இது 2வது பதக்கம். ஏற்கனவே அவர் கடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்றுள்ளார்.