நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸின் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் முறையாக நுழைந்துள்ள இந்திய, பாகிஸ்தானிய ஜோடியான ரோஹன் போபன்னா, அய்சம் உல் ஹக் குரேஷி ஜோடி இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளனர்.இவர்களின் வெற்றி இரு நாடுகளிலும் பெரும் மன மாற்றங்களை ஏற்படுத்தும், வரலாறுகள் பல படைக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் ஆட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே இருவரும் இணைந்து அசத்தலாக ஆடி இந்திய, பாகிஸ்தானிய பெருமையை டென்னிஸ் அரங்கில் வெளிப்படுத்தி வருகின்றனர்.அரை இறுதிக்குள் அதிரடியாக நுழைந்துள்ள இந்த ஜோடி இறுதிப் போட்டியில் வென்றால் நிச்சயம் அது இரு நாடுகளிலும் பெரும் ஆர்ப்பரிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.அதை விட முக்கியமாக இரு நாட்டு ரசிகர்களும் ஒன்றாக அமர்ந்து இரு வீரர்களையும் உற்சாகப்படுத்தி வரும் காட்சி பெரும் வியப்பாகவும், வித்தியாசமாகவும் உள்ளது.அரை இறுதிப் போட்டியில் போபன்னா-குரேஷி ஜோடி 7-6 (5), 6-4 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் எட்வர்டோ ஷ்வாங்க், ஹோரசியோ ஜெபல்லாஸ் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.இந்தோ-பாக் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ள போபன்னா-குரேஷி ஜோடி இறுதிப் போட்டியில் வலிமை வாய்ந்த பாப் பிரையன், மைக் பிரையன் ஜோடியை சந்திக்கவுள்ளது.இதில் வெற்றி பெற்று பட்டம் வென்றால் அது இந்திய, பாகிஸ்தானிய உறவுகளிலும் கூட பல மறுமலர்ச்சிகளை ஏற்படுத்தலாம், இரு நாட்டு விளையாட்டு உறவுகள் மேலும் மேம்படும் வாய்ப்புகளும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.