நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா, ஒசாகா மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மார்டின் டெல் பொட்ரோ மற்றும் ஜோகோவிக் மோத உள்ளனர்.
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் நடை பெற்று வருகிறது. மகளிர் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பல முன்னணி வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி அடைந்து முதல் நான்கு சுற்றுகளுக்குள் வெளியேறியனர்.
ரோஜர் பெடரர் நான்காம் சுற்றில் தோல்வி அடைந்தார். அதே போல மகளிர் பிரிவில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சைமோனா ஹாலெப் முதல் சுற்றில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார்.
மகளிர் பிரிவு அரையிறுதியில், செரீனா வில்லியம்ஸ் செவேஸ்டோவாவை எளிதாக வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். ஜப்பானின் ஒசாகா, கீஸ்-ஐ அரையிறுதியில் தோற்கடித்து இறுதிக்கு முன்னேறினார்.
ஜப்பான் சார்பில் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் நீண்ட காலம் கழித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் ஒசாகா மீது எதிர்பார்ப்பு உள்ளது, மறுபுறம், நீண்ட ஓய்வுக்கு பின் வந்த செரீனா பட்டம் வெல்லாமல் இருப்பதால், அந்த குறையை தற்போது போக்குவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
ஆடவர் பிரிவில் இந்த ஆண்டு விம்பிள்டனில் வென்ற ஜோகோவிக் மற்றும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற டெல் பொட்ரோவும் இறுதியில் ஆட உள்ளனர். முன்னணி வீரர் நடால், அரையிறுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, பாதியிலேயே வெளியேறியதால், டெல் பொட்ரோ இறுதிக்கு முன்னேறினார்.