
ஒசாகா -அஸரெங்கா மோதல்
நியூயார்க்கில் நடைபெற்றுவந்த யுஎஸ் ஓபன் 2020 டென்னிஸ் போட்டிகளில் மகளிர் தனிநபர் பிரிவிற்கான இறுதிப்போட்டி ஆர்தர் ஆஷே மைதானத்தில் ரசிகர்கள் அற்ற காலி மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த இறுதிப்போட்டியில் ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா மற்றும் பெலாரசை சேர்ந்த விக்டோரியா அஸரெங்கா மோதினர்.

நவோமி ஒசாகா வெற்றி
ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடைபெற்றாலும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நவோமி ஒசாகா வெற்றி பெற்றுள்ளார். முதல் செட்டில் 6க்கு 1 என அஸரெங்கா முன்னிலை வகித்த நிலையில் சுதாரித்துக் கொண்ட ஒசாகா தொடர்ந்து 6க்கு 3 மற்றும் 6க்கு 3 என்ற செட் கணக்குகளில் தன்னுடைய வெற்றியை உறுதி செய்தார். இதன்மூலம் அவர் தனது 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

சுதாரித்த ஒசாகா
ஒருமணிநேரம் 53 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் முதல் 26 நிமிடங்கள் அஸரெங்காவின் ஆதிக்கமே இருந்தது. முதல் செட்டில் அவருக்கு 88 சதவிகிதம் வெற்றிக்கான வாய்ப்பு காணப்பட்டது. ஆயினும் அடுத்தடுத்த செட்களில் அவர் ஒசாகாவிடம் தன்னுடைய வெற்றியை பறிகொடுத்தார்.

எதிர்ப்பு தெரிவித்து முகக்கவசம்
கடந்த 2018ல் யுஎஸ் ஓபன் மற்றும் கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் டைட்டிலை வென்றுள்ள 22 வயதான ஒசாகா இதன்மூலம் தன்னுடைய 3வது கிராண்ட்ஸ்லாமை வென்றுள்ளார். இந்த தொடர் முழுவதும் அவர் கருப்பினத்தவர்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும்வகையில் முகக்கவசங்களை அணிந்திருந்தார்.

தமிர் ரைசின் பெயர் பொறித்த முகக்கவசம்
இறுதிப்போட்டியில் கடந்த 2014ல் வெள்ளைக்கார காவலரால் ஓஹியோவில் சுட்டுக் கொல்லப்பட்ட 12 வயது ஆப்ரிக்க -அமெரிக்க சிறுவனான தமிர் ரைசின் பெயர் பொறித்த முகக்கவசத்தை அவர் அணிந்திருந்தார். மேலும் இந்த தொடரில் அவர் பங்கேற்ற போட்டிகளில் இதேபோல உயிரிழந்த பிரேயோன்னா டெய்லர், எலிஜா மெக்லைன், அஹ்மத் ஆர்பரி, ட்ரெவான் மார்ட்டின், ஜியார்ஜ் பிளாய்ட் ஆகியோரின் பெயர்பொறித்த முகக்கவசங்களையும் அணிந்து தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications