நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு நோவக் ஜோகோவிச் தகுதிப் பெற்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிக முக்கியமான தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் இன்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் உலகின் நான்காம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸ்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் மோதினர்.
இப்போட்டியில் 4-6, 6-2, 6-4,4-6, 6-2 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் ஸ்வரேவ் அடைந்த தோல்விக்கு இந்த தொடரில் ஜோகோவிச் அவரை பழி தீர்த்துக் கொண்டார். இதையடுத்து, இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெட்வதேவை ஜோகோவிச் எதிர்கொள்கிறார். இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், 4-வது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல தீவிரம் காட்டி வருகிறார்.
அதுமட்டுமின்றி, இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பதன் மூலம், புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது, கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் 31வது முறையாக இறுதிப் போட்டிக்கு அவர் முன்னேறியுள்ளார். இதற்கு முன்னர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மட்டுமே 31 முறை கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். இப்போது, ஜோகோவிச் அந்த சாதனையை சமன் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, இந்த இறுதிப் போட்டி, ஜோகோவிச்சின் 9வது அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியாகும்.
நாளை (செப்.12) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் மெட்வதேவை ஜோகோவிச் எதிர்கொள்கிறார். அவர் ஏற்கனவே, பிப்ரவரியில் ஆஸ்திரேலிய ஓபன், ஜூன் மாதம் பிரெஞ்சு ஓபன் மற்றும் ஜூலை மாதம் விம்பிள்டன் ஆகியவற்றை வென்றிருக்கும் நிலையில், அமெரிக்க ஓபன் தொடரையும் வென்றால், மேலும் அது அவருக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையும். அதேபோல், இத்தொடரை வென்றால், 34 வயதான ஜோகோவிச் தனது தனது 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
5வது டெஸ்ட் போட்டி இருக்கு.. ஆனா இல்ல.. ரசிகர்களை மீண்டும் குழப்பும் பிசிசிஐ அறிக்கை!