யார்க் : இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யூஎஸ் ஓபன் அதன் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னணி வீரரான நோவாக் ஜோகோவிக் அரை இறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

அரை இறுதியில் பென் ஷெல்டன்-ஐ சந்தித்தார் ஜோகோவிக். இந்தப் போட்டி 2 மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்றது. இதன் முடிவில் 6 - 3, 6 - 2, 7 - 6 (6 - 4) என்ற நேர் செட்களில் ஜோகோவிக் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் அவர் தான் 36 வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது அவரது நூறாவது யூஎஸ் ஓபன் போட்டி என்பதும் அதில் அவரது 87 வது வெற்றி இது என்பதும் கூடுதல் பெருமை ஆகும்.
யூஎஸ் ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிக் யாரை சந்திப்பார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மற்றொரு அரை இறுதியில் டானில் மெட்வெடெவ் - தற்போதைய சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ் சந்திக்கின்றனர். இதில் வெற்றி பெறும் வீரர், ஜோகோவிக் உடன் மோதுவார்.
ஏற்கனவே, அல்கராஸ் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஜோகோவிக்கி வீழ்த்தி இருந்ததால், அவர்கள் இருவரும் மீண்டும் சந்திக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மாத்யூ எம்ப்டன் ஜோடி தோல்வி அடைந்து கிராண்ட்ஸ்லாம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.
அமெரிக்காவின் ராஜீவ் ராம் மற்றும் யுனைட்டட் கிங்டமின் ஜோ சாலிஸ்பரி இணையிடம் 6 - 2, 3 - 6, 4 - 6 என்ற செட்களில் தோல்வி அடைந்தது போபண்ணா ஜோடி.
இந்தப் போட்டியில் வென்று இருந்தால் யூஎஸ் ஓபன் வெல்லும் மிக வயதான வீரராக இருந்திருப்பார். அந்த வாய்ப்பை அவர் தவறவிட்டார்.