நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் ஜோகோவிச் அதிர்ச்சியை தோல்வியை சந்தித்துள்ளார். 25வது கிராண்ட்ஸ்லாம் கோப்பையை வெல்லும் கனவுடன் ஜோகோவிச் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் களமிறங்கி இருந்தார். ஆனால் 3வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்சை பாபிரினை எதிர்கொண்ட ஜோகோவிச் தோல்வியை தழுவி வெளியேறியுள்ளார்.
டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் யுஎஸ் ஓபன் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரின் 2வது சுற்றிலேயே ஸ்பெய்ன் நட்சத்திர வீரர் அல்காரஸ் தோல்வியடைந்து வெளியேறினார். இதன் காரணமாக யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரை ஜோகோவிச் வெல்லவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டது.

ஏனென்றால் தற்போது டென்னிஸ் யுத்தம் அல்காரஸ் - ஜோகோவிச் இடையில் தான் நடந்து வருகிறது. விம்பிள்டன் தொடரில் அல்காரஸ் வென்ற நிலையில், ஒலிம்பிக் தொடரில் அல்காரஸை வீழ்த்தி ஜோகோவிச் பழிதீர்த்தார். இதன் மூலமாக ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை முதல்முறையாக கைப்பற்றி ஜோகோவிச் சாதனை படைத்தார்.
அதே எனர்ஜியுடன் 25வது கிராண்ட்ஸ்லாம் கோப்பையை வெல்லும் முனைப்புடன் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் விளையாடி வந்தார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் 3வது சுற்றில் களமிறங்கிய ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் அலெக்சை பாபிரினை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பாப்பிரின் 6-4 என்ற கணக்கில் கைப்பற்ற பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.
ஆனால் ஜோகோவிச் எப்போதும் விட்டுப் பிடிப்பவர் தான். அவரது ஸ்டைலே 2வது செட்டை இழந்த பின் கம்பேக் கொடுப்பது தான் என்பதால், பலரும் ஜோகோவிச் ஆட்டத்தின் பக்கம் கவனத்தை திருப்பினர். ஆனால் கண்மூடி திறப்பதற்குள் மீண்டும் 6-4 என்ற கணக்கில் 2வது செட்டையும் பாப்பிரின் கைப்பற்றினார். இதனால் ஜோகோவிச் மீதான அழுத்தம் எகிறியது.
