2024 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர்.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
நியூயார்க்: 2024 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்துடன் இங்கிலாந்தின் ஜாக் ட்ரேப்பருக்கு எதிராக போராடி வென்றார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இத்தாலிய வீரர் என்ற சாதனையை செய்தார்.
ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் ஜானிக் சின்னர் முதல் இடத்தில் இருக்கிறார். அதே தரவரிசையில் இங்கிலாந்தின் ஜாக் ட்ரேப்பர் 25 வது இடத்தில் இருக்கிறார். 2024 அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் அரை இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் - ஜாக் ட்ரேப்பர் மோதினர். இவர்கள் இருவரில் ஜானிக் சின்னர் எளிதாக வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், இந்தப் போட்டியின் இரண்டாவது செட்டின் போது ஜானிக் சின்னருக்கு இடது கையில் லேசான காயம் ஏற்பட்டது. அந்த வலியுடன் ஜானிக் சின்னர் தொடர்ந்து விளையாடினார். இரண்டாவது செட்டை அவர் போராடி வென்றார். பின்னர் முதல் மூன்று செட்டுகளையும் 7-5, 7-6(3), 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையார் பிரிவின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இத்தாலிய வீரர் என்ற சாதனையை செய்துள்ளார் ஜானிக் சின்னர். மேலும், அவர் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருந்தார். அதுவே அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். கடந்த 24 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒரே சீசனில் 22 போட்டிகளை வென்ற ஐந்தாவது டென்னிஸ் வீரர் என்ற சாதனையையும் செய்தார் ஜானிக் சின்னர்.


Click it and Unblock the Notifications