நியூயார்க்: 2025 ஆம் ஆண்டின் இறுதி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர்களில் பிரதான ஒன்றாக கருதப்படும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது.
இதில் உலகில் உள்ள முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஆக உலகின் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னரும், மகளிர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை ஆரியானா சபலெங்காவும் களமிறங்குகின்றனர்.

ஆடவர் பிரிவில் அல்காரஸும் சின்னரும் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களில் நான்கு இறுதிப் போட்டிகளில் இருவரும் மோதி இருக்கின்றார்கள். இதில் அல்காரஸ் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும், சின்னர் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றிருந்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் அலெக்சாண்டர் ஸ்வரெவ் உடன் வீழ்த்தி சின்னர்தான் வென்று இருந்தார்.அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றை அட்டவணையின் படி மீண்டும் இறுதிப் போட்டிகளில் சின்னரும் அல்காரஸ் மோத வாய்ப்பு இருக்கின்றது. இதேபோன்று 38 வயதான ஜோகோவிச் தன்னுடைய 25ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் மீண்டும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் களமிறங்குகிறார்.
நடப்பாண்டில் ஜோகோவிச் ஒரு கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டி கூட தகுதி பெறவில்லை.
இதனால் இந்த சோகமான ஆண்டை வரலாற்று வெற்றியுடன் முடிக்க ஜோகோவிச் இந்த தொடரில் களமிறங்குகிறார். இந்த தொடரில் எந்தவித பிரிவிலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பரிசுத்தொகை இம்முறை வரலாற்றில் இல்லாத அளவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வீரர் வீராங்கனைகளுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 43 கோடியே 65 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம்.ஓடிடியில் ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்க்க முடியும்.