நியூயார்க் : நடப்பாண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கியது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் ஜோகோவிச் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் களம் இறங்குகின்றனர். காயம் காரணமாக இந்த போட்டியிலும் நடால் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் இந்த தொடரில் உலகின் நான்காம் நிலை வீரரான ஹோல்ஜர் ரூன் முதல் சுற்றில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார். பொதுவாக முதல் 10 இடங்களில் இருக்கும் வீரர்களுக்கு எப்போதும் மத்திய ஆடுகளத்தில் தான் போட்டியை நடத்துவார்கள். இல்லையெனில் நம்பர் ஒன் அல்லது நம்பர் டூ ஆகிய ஆடுகளத்தில் நடத்துவார்கள். இந்த நிலையில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூன் நம்பர் ஐந்தாவது ஆடுகளத்தில் விளையாடும் வகையில் போட்டி அமைக்கப்பட்டது.
இதற்கு ஹோல்ஜர் கடுப்பாகி, கிண்டல் செய்யும் வகையில் நான் எந்த ஆடுகளத்தில் விளையாட போகிறேன் என்று தெரியவில்லை என்றால் இந்த மேப்பை பார்த்து வாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் அந்த ஆடுகளத்தில் குவிய தொடங்கி விட்டார்கள். மேலும் ஹோல்ஜர் விளையாடும் போது தேவையில்லாமல் கத்தி அவருடைய கவனத்தை திசை திருப்பும் வகையில் செயல்பட்டார்கள்.
இது குறித்து ஹோல்ஜர் நடுவரிடம் புகார் அளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முடிவாக ஸ்பெயினை சேர்ந்த ராபட்டோவிடம் 6க்கு 3, 4க்கு6, 6க்கு3,6க்கு2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவி முதல் சுற்றிலே வெளியேறினார். இதனிடையே 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற டோமினிக் தனது முதல் சுற்றில் விளையாடினார். இதில் அவர் 6க்கு 3, 6க்கு 2, 6க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.