நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயினை சேர்ந்த அல்காரஸ் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஆறாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தி இருக்கிறார்.
இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரராக இருந்த ஜானிக் சின்னரை வீழ்த்தி இந்த பட்டத்தை அல்காரஸ் கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் நடப்பாண்டில் நடைபெற்ற நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், இவ்விரண்டு வீரர்களும் தலா இரண்டு பட்டங்களை கைப்பற்றியுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டத்தை சின்னர் கைப்பற்ற, பிரெஞ்சு ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை அல்காரஸ் தற்போது வென்றுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டி அரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாக தொடங்கியது. இதற்கு காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த போட்டியை நேரில் காண வந்ததால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.
இதனால் போட்டி தாமதமானது. அதிபர் டிரம்ப், வந்தவுடன் அங்கிருந்த சில ரசிகர்கள் அவருக்கு எதிராக கூக்குரலை எழுப்பினர். இது பதற்றத்தை ஏற்படுத்தியது. எனினும் போட்டி தொடங்கியதில் இருந்து அல்காரஸ் அபாரமாக விளையாடி சின்னருக்கு அதிர்ச்சி அளித்தார். இந்தத் தொடரில் ஒரு செட்டை கூட இழக்காமல் விளையாடிய அல்காரஸ், முதல் சட்டை ஆறுக்கு இரண்டு என்று எளிதில் கைப்பற்றினார்.
இந்த நிலையில் சின்னர் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது செட்டை 6 க்கு 3 என்று தன் வசப்படுத்தினார். எனினும் அதன் பின் சுதாரித்துக் கொண்டு விளையாடிய அல்காரஸ், தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்றாவது செட்டை 6 க்கு 1 என்ற கணக்கில் வென்றார். இதனை அடுத்து நான்காவது செட்டில் இரு வீரர்களும் அபாரமாக விளையாடினாலும், அல்காரசின் கையே ஓங்கி இருந்தது.
இந்த போட்டி ஐந்தாவது செட்டுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்காவது செட்டை 6க்கு 4 என்ற கணக்கில் வென்று போட்டியை அல்காரஸ் முடித்தார். இதன் மூலம் இரண்டு மணி நேரம் 42 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் அல்காரஸ் 6 க்கு 2, 3 க்கு 6, 1க்கு6, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வென்றார்.இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்க்கு இந்திய ரூபாய் மதிப்பில் 44 கோடி வழங்கப்பட்டது.
ரன்னர் அப் பட்டத்தை வென்ற இத்தாலியின் சின்னருக்கு 22 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. நடப்பு சீசனில் மட்டும் இருவரும் ஐந்து இறுதிப் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். இதனை விளையாட்டாக சொன்ன அல்காரஸ்," என்னுடைய குடும்பத்தினரை விட உங்களை தான் நான் அதிகமாக சந்திக்கின்றேன். உங்களுடன் களத்தில் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது" என்று கூறினார். தோல்வி குறித்து பேசிய சின்னர், இன்று கடுமையாக போராடியும் வெற்றி பெற முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார். இதன் மூலம் தொடர்ந்து 65 வாரங்களாக முதலிடத்தில் இருந்த சின்னர் தன்னுடைய மகுடத்தை இழந்தார். இதன் மூலம் புதிய நம்பர் ஒன் வீரராக அல்காரஸ் இடம் பிடித்தார்.