விராட் கோலியால் தான் கிரிக்கெட்டே பார்க்க தொடங்கினேன்.. டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்
மாட்ரிட்: டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி காரணமாக கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விரைவில் வர உள்ளதாகவும், அவருடன் இணைந்து டென்னிஸ்-கிரிக்கெட் தொடர்பாக போட்டியை நடத்தும் திட்டத்தையும் அவர் சூசகமாக வெளியிட்டார்.
இரு ஜாம்பவான்களின் எதிர்பாராத சந்திப்பு குறித்து ஜோகோவிச் விவரித்தார். 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற அவர், கோலியுடன் பழகும் முன் கிரிக்கெட்டைப் பின்தொடரவில்லை என்றும், ஆனால் அது விரைவில் மாறியது என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "ஆம், விராட் என் நண்பர். நான் அவரை மதிக்கிறேன், போற்றுகிறேன். கிரிக்கெட்டை நான் பின்தொடரத் தொடங்கியதற்கு உண்மையைச் சொல்லப்போனால் அவரே காரணம். நான் இதற்கு முன் கிரிக்கெட்டைப் பின்தொடர்ந்ததில்லை, ஆனால் அவர் மூலமாக நான் அதை அதிகம் பின்தொடரத் தொடங்கினேன்," என்று ஜோகோவிச் தெரிவித்தார்.
இந்திய ரசிகர்கள் விரைவில் இந்த இரு வீரர்களையும் ஒன்றாகப் பார்க்கும் வாய்ப்பு உள்ளதாக ஜோகோவிச் சூசகமாகத் தெரிவித்தார். இந்திய வருகை குறித்து தன் எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தினார்.
"நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். நான் இந்தியாவுக்கு வந்தால், வருவேனா என்று சொல்ல விரும்பவில்லை, ஆனால் வரும்போது அவர் என்னுடன் இணைந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட்டில் கொஞ்சம் பங்கேற்று, மகிழ்ந்து, விளையாட்டைக் கொண்டாடும்போது பாசிட்டிவான, நல்ல அதிர்வுகளைப் பரப்பலாம்," என்றார் ஜோகோவிச்.
மாட்ரிட்டில் நடைபெற்ற லாரியஸ் விளையாட்டு விருதுகள் விழாவில் பேசிய ஜோகோவிச், இந்தியாவுக்கான பயணம் தனக்கு மிக முக்கியமானது என்றார். உலகெங்கிலும் இந்திய டென்னிஸ் மற்றும் விளையாட்டு ரசிகர்களின் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
"எனது செய்தி எப்போதும் அன்பு, மரியாதை மற்றும் பல ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள இந்திய டென்னிஸ் மற்றும் விளையாட்டு ரசிகர்களிடமிருந்து நான் தனிப்பட்ட முறையில் பெற்று வரும் அனைத்து ஆதரவிற்கும் எனது பாராட்டுதலைத் தெரிவிப்பதாகும்," என்று ஜோகோவிச் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
"உங்களை மிக விரைவில் இந்தியாவில் சந்திக்கிறேன்... கடந்த சில வருடங்களாகவே இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்ற ஒரு அழைப்பை நான் உணர்கிறேன். ஒரு நிகழ்வை நடத்தவோ, ஒரு போட்டியில் பங்கேற்கவோ அல்லது எதுவாக இருந்தாலும் நான் இந்தியாவுக்கு வர முடியும் என்று நான் மிகவும் நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications