லண்டன் : 2020 விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட உள்ளதாகவும், அந்த அறிவிப்பு வரும் புதன்கிழமை அன்று வெளியாகும் என்றும் ஜெர்மன் டென்னிஸ் அமைப்பின் துணை தலைவர் டிர்க் ஹர்டாப் கூறி உள்ளார்.
டென்னிஸ் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தடுத்து நிறுத்தி உள்ளது கொரோனா வைரஸ். மக்கள் கூட்டமாக கூடினால் இந்த வைரஸ் வேகமாக பரவும் என்பதால் விளையாட்டுப் போட்டிகள் உலகம் முழுவதும் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.
டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த சில நாட்கள் முன் மே மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. அந்த தள்ளி வைக்கும் முடிவு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தது.
செப்டம்பர் மாதம் பல்வேறு டென்னிஸ் தொடர்கள் உள்ளதால் அதில் குழப்பம் வரலாம் என கருதப்பட்டது. இந்த நிலையில், மற்றொரு கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் தொடர் ஒட்டு மொத்தமாக ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
அதை உறுதி செய்துள்ளார் ஜெர்மன் டென்னிஸ் அமைப்பின் துணை தலைவர் டிர்க் ஹர்டாப். அவர் கூறுகையில், "விம்பிள்டன் அடுத்த புதன்கிழமை அன்று கூட்டம் நடத்தி இறுதி முடிவை எடுக்க உள்ளது" என்றார்.
மேலும், ரத்து செய்ய தேவையான முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாகவும், கடைசி முடிவை எடுக்க மட்டுமே விம்பிள்டன் கூடுவதாகவும் அவர் கூறினார். கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் பல சர்வதேச வீரர்கள் கலந்து கொள்ளும் தொடரை நடத்த முடியாது எனவும் அவர் கூறினார்.