லண்டன்: சனிக்கிழமை அன்று நடைபெற்ற 2024 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினியை 6-2, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, பார்போரா கிரெஜ்சிகோவா தனது முதல் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
செக் குடியரசைச் சேர்ந்த 28 வயதான பார்போரா கிரெஜ்சிகோவா 2021 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருந்தார். இடையே காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த முறை பிரெஞ்சு ஒபனில் தரவரிசையில் கூட இடம் பெறவில்லை. தற்போது விம்பிள்டனில் 32 வீராங்கனைகளில் 31வது தரவரிசையில் இடம் பெற்றார்.

இந்த நிலையில் போராடி தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும், தனது முதல் விம்பிள்டனையும் வென்றார் பார்போரா கிரெஜ்சிகோவா.
விம்பிள்டனின் கடந்த எட்டு ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வெல்லும் எட்டாவது பெண் கிரெஜ்சிகோவா ஆவார். எட்டு ஆண்டுகளாக வெவ்வேறு வீராங்கனைகள் விம்பிள்டன் வென்று உள்ளனர். கடந்த ஆண்டு விம்பிள்டன் சாம்பியனும் செக் குடியரசைச் சேர்ந்தவர் தான். கடந்த வாரம் முதல் சுற்றில் தோல்வியடைந்த மார்கெட்டா வோண்ட்ரூசோவா தான் கடந்த ஆண்டு விம்பிள்டன் வென்று இருந்தார்.
மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஏழாவது நிலை வீராங்கனை பயோலினி தோல்வி அடைந்து இருந்தார். கடந்த மாதம் பிரெஞ்சு ஓபனிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறி ட் ஒளவி அடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 2016 இல் செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு, ஒரே சீசனில் பிரெஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற சாதனையை செய்து இருக்கிறார் பயோலினி.