லண்டன்: 2024 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் அரை இறுதி சுற்றில் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகிய இருவரும் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியிலும் இவர்கள் இருவரும் மோதி இருந்தனர்.
அந்தப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் வெற்றி பெற்று இருந்தார். தற்போது மீண்டும் அவர்கள் இருவரும் மோத உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை கார்லோஸ் அல்கராஸ் தனது விம்பிள்டன் பட்டத்தை தக்க வைப்பாரா? அல்லது ஜாம்பவான் ஆன நோவக் ஜோகோவிச், அல்கராசிடம் இருந்து பட்டத்தை தட்டிப் பறிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக நடந்த முதல் அரை இறுதியில் டேனியல் மெத்வதேவ் சந்தித்த கார்லோஸ் அல்கராஸ் 6 - 7 (1), 6 - 3, 6 - 4, 6 - 4 என்ற செட் கணக்கில் வென்றார். இதில் முதல் செட்டை மிகவும் போராடி தோற்ற அல்கராஸ், அடுத்த மூன்று செட்களை வரிசையாக வென்று அரை இறுதியில் வெற்றி பெற்றார்.
இரண்டாவது அரை இறுதியில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி-ஐ சந்தித்த நோவக் ஜோகோவிச் 6 - 4, 7 - 6 (2), 6 - 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள கார்லோஸ் அல்கராஸ் டென்னிஸ் உலகின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார். இந்த முறை அவர் மீண்டும் பட்டத்தை தக்க வைத்தால், அவர் டென்னிஸ் உலகின் மறுக்க முடியாத வீரராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.