லண்டன்: பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று முதல் தொடங்கி வரும் ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புல் தலையில் நடைபெறும் ஒரே கிராண்ட் ஸ்லாம் தொடராக விம்பிள்டன் டென்னிஸ் கருதப்படுகிறது.
ஸ்பெயினின் நட்சத்திர வீரர் அல்காரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்ற அதே உத்வேகத்துடன் இந்த தொடரில் அவர் களமிறங்குகிறார்.

இந்த சூழலில் ஏழுமுறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச், விம்பிள்டனில் ஒட்டுமொத்தமாக 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய ஜோகோவிச், இது தமக்கு கடைசி விம்பிள்டன் தொடரா என்று பலரும் கேட்கிறார்கள்.
இதுபோன்ற நெருக்கடி நிறைந்த தொடரில் இந்த வயதில் விளையாடுவது கொஞ்சம் கடினமாக தான் இருக்கின்றது. எனினும் மனதளவில் நல்ல நிலையில் இருக்கின்றேன். உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கின்றது. முடிந்தவரை டென்னிஸ் விளையாடுவேன் என்று ஜோகோவிச் பதில் அளித்தார்.
இந்த சூழலில் முதல் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த சின்னருடன் ஜோகோவிச் அரையிறுதி போட்டியில் மோத வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் உள்ளிட்ட ஸ்டார் வீரர்களுக்கு இறுதி போட்டி வரை எளிதாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
மகளிர் ஒற்றை பிரிவை பொறுத்தவரை 2016 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஏழு சாம்பியன் பட்டத்தை 7 வெவ்வேறு வீராங்கனைகள் வென்றிருக்கிறார்கள். கடந்த முறை பார்போரா வென்ற நிலையில் இம்முறை ஆரியானா சபலிங்கா, கோகோ காஃப் உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்பியன் பட்டம் வெல்லும் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் 24 கோடி ரூபாய் மதிப்பில் பரிசுத்தொகை வழங்கப்படும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் 147 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக Line நடுவர் என்று நபர் இம்முறை நீக்கப்பட்டு இருக்கிறார். அவருடைய பணியை அதிநவீன கேமரா தொழில்நுட்பத்துடன் கணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பந்து கோட்டிற்கு வெளியே செல்வதை இந்த தொழில்நுட்பம் கண்டறிந்து உடனே அறிவிக்கும்.